28 ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள 44 வது செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா, ஏற்பாடுகள் பற்றி நேரு உள்விளையாட்டு அரங்கில் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது:
ஜூலை மாதம் 28 ஆம் தேதி, 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான தொடக்க விழா நடைபெற உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கினை ஆய்வு மேற்கொண்டேன். நேரு உள் விளையாட்டு அரங்கின் பராமரிப்பு பணிகள் தமிழக முதலமைச்சர் கண்காணிப்பில் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது.
வரும் 20 ஆம் தேதிக்குள் இந்த பணிகள் முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேரு உள் விளையாட்டு அரங்கில் உள்ள இருக்கைகள் அனைத்தும் மறு சீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த அரங்கத்திற்குள் கூடுதலாக 125 டன் ஏசி அமைக்கும் பணியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
188 நாடுகளில் இருந்து 2000 வீரர்கள் வர இருகிறார்கள். அவர்களை நேரடியாக சென்னை விமான நிலையத்திலிருந்து நேரடியாக மாமல்லபுரத்தில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்படுவார்கள்.
23ஆம் தேதியிலிருந்து வீரர்கள் வர உள்ளார்கள். தொடக்க விழா 28ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதனடிப்படையில், வீரர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து நேரு உள்விளையாட்டு நடைபெறும் தொடக்க விழாவிற்கு அவர்களை அழைத்து வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏழு மருத்துவ குழுவினர்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. கண்டிப்பாக வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய அனைத்து வீரர்களுக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதுமட்டுமில்லாமல் போட்டி நடைபெறுகின்ற இடத்தில் பணியாற்றுகின்ற அனைத்து ஊழியர்களுக்கும், அவர்களை தங்க வைத்து இருக்கின்ற நட்சத்திர விடுதி ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
மேலும் எதிர்பார்க்கின்ற சூழ்நிலைக்கு ஏற்ப தொடக்க விழா நடைபெற உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்த பின்பு அரங்கத்தில் அனுமதிக்கப்படுவார்கள்.
செஸ் போட்டிகள் நடைபெறவுள்ள மாமல்லபுரத்தின் பல்வேறு பகுதிகளில் பொது மக்களுக்காக எல்இடி திரை அமைக்கப்படும்.
மேலும் நடைபெற உள்ள அனைத்து போட்டிகளையும் இணைய வழி மூலமாக பார்ப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தொலைக்காட்சி மூலமாக அனைத்து போட்டிகளையும் மக்களிடையே கொண்டு செல்வதற்கும் நடவடிக்கை செய்யப்பட்டிருக்கிறது.
செஸ் போட்டி நடைபெறவுள்ள இடத்தில் வீரர்கள், ஊழியர்கள் மற்றும் அங்கு இருக்கும் அதிகாரிகள் அனைவருக்குமே ஆர்டிபிசிஆர் டெஸ்ட் எடுக்கப்படும். மேலும் போட்டி நடைபெற உள்ள அந்த மாமல்லபுரம் இடம் காவல்துறையினர் மற்றும் மருத்துவத் துறையினர் கட்டுப்பாட்டில் இருக்கும்.
வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
இங்கிலாந்தில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டிற்கு தமிழ்நாட்டில் இருந்து 6 வீரர்கள் செல்ல உள்ளார்கள். அவர்களுக்குத் தேவையான வசதிகள் அனைத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்து அவர்களை அனுப்புவதற்கு துறை சார்ந்த அதிகாரிகள் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி கலந்து கொள்ளும் வீரர்களுக்கு கலை நிகழ்ச்சிகள் சுற்றுலாத் துறை மூலமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் வெளியே சென்று சுற்றி பார்ப்பதற்கு சூழ்நிலை கிடையாது.
188 நாடுகள் பங்கு பெறுவதற்காக பதிவு செய்துள்ளார்கள் , அதில் 140 நாடுகளுக்கு மேல் விசா பெற்றுள்ளார்கள். இந்தியாவில் தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தான் அதிகமாக நாடுகள் பதிவு செய்து உள்ளார்கள் என்றார் அமைச்சர் மெய்யநாதன்.








