சென்னை: டென்னிஸ் மைதானத்தில் ஜெர்மனி வீராங்கனையின் குழந்தைகள் செய்த அட்டகாசம்

சென்னையில் நடைபெற்று வரும் ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்றுள்ள ஜெர்மனி வீராங்கனை டட்ஜனா மரியாவின் குழந்தைகள், தனது தாயை போன்று டென்னிஸ் விளையாடியது அனைவரையும் கவர்ந்துள்ளது.   சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ்…

சென்னையில் நடைபெற்று வரும் ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்றுள்ள ஜெர்மனி வீராங்கனை டட்ஜனா மரியாவின் குழந்தைகள், தனது தாயை போன்று டென்னிஸ் விளையாடியது அனைவரையும் கவர்ந்துள்ளது.

 

சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகளின் முதல் சுற்று ஆட்டம், நேற்று இரண்டாவது நாளாக சுவாரஸ்யமாக நடைபெற்றது. இந்நிலையில் போட்டியில் பங்கேற்றுள்ள ஜெர்மனி வீராங்கனையான டட்ஜனா மரியாவின் குழந்தைகள் இருவரும், தான் தாய் போட்டியில் விளையாடி வரும் போது, தனது பாட்டியுடன் மைதானத்தை வலம் வருவது வழக்கம்.

 

நேற்றைய தினம் டட்ஜனா மரியாவின் ஆட்டம் நடைபெற்று வரும் அதே வேளையில், அவரது 15 மாத குழந்தை “சிஷி” தன் அக்காவுடன், தன் அளவிற்கு தகுந்த டென்னிஸ் ராக்கெட்டை எடுத்துக் கொண்டு, டென்னிஸ் வீராங்கனைகளின் ஓய்வறை அருகே விளையாடி கொண்டிருந்த விதம் பார்ப்பதற்கு நெகிழ்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.

தன்னை நெருங்குபவர்களிடம் அழாமல், அவர்களிடம் தனக்கு பந்து போட சொல்லும் “சிஷி” காமிராவை பார்த்ததும், பல போஸ்களை கொடுத்து, தன் தாயை போலவே ஷாட்களை ஆட முயற்சி செய்த விதம், வரும் காலத்தில் தான் ஒரு சிறந்த டென்னிஸ் வீராங்கனையாக வளர்ச்சி பெறுவேன் என சொல்லாமல் சொல்லியது போல இருந்தது. அதுமட்டும் இன்றி தனது 35 வயது அம்மாவிற்கு பயிற்சி அளிப்பதே 15 மாதம் மட்டுமே நிரம்பிய “சிஷி” தான் என்பது ஆச்சரியமாக உள்ளது.

 

அனுபவம் வாய்ந்த டட்ஜனா மரியா சிறந்த போட்டியாளர் என்பது மட்டும் அல்லாமல், தனது குழந்தைகளை எதிர்கால தொலைநோக்கு பார்வையுடன் வளர்க்கும் சிறந்த தாயாகவும் வெற்றி பெற்று இருக்கிறார். முன்னதாக இந்த தொடரில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியவின் நம்பர் ஒன் வீராங்கனை அங்கிதா ரெய்னாவை முதல் சுற்றில் வீழ்த்திய டட்ஜனா மரியா, நடப்பாண்டு விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் அரையிருதி போட்டியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டும் இன்றி டட்ஜனா மரியா குடும்பம் ஒரு கலப்பு குடும்பமாகும், அதாவது மரியா ஜெர்மனியை சேர்ந்தவராகவும், அவரது கணவர் சார்லஸ் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவராகவும் இருக்கும் நிலையில், இவர்களது குழந்தைகளான கார்லோத் மற்றும் சிஷி ஆகிய இருவருமே அமெரிக்காவில் பிறந்தவர்கள் என்பது அவரது குடும்பத்திற்கு மேலும் சிறப்பு ஆகும்.

 

– நாகராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.