உலக அளவிலான காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கான விளையாட்டுப் போட்டியில் சென்னைக் காவல்துறையைச் சேர்ந்த மூன்று பேர் 4 தங்கப் பதக்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் வென்று பெருமை சேர்த்துள்ளனர். அவர்களைப் பற்றி விவரிக்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு.
உலக அளவிலான காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கான விளையாட்டுப் போட்டி நெதர்லாந்தில் உள்ள ரோட்டர் டேம் எனும் இடத்தில் நடைபெற்றது. இதில் 70 நாடுகளிலிருந்து 6000 காவலர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் கலந்து கொண்டனர். இந்தியாவிலிருந்து மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் இந்த விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாட்டிலிருந்து மட்டும் 12 காவலர்கள் கலந்து கொண்டு 13 தங்கம், 9 வெள்ளி, 3 வெண்கலம் பதக்கங்கள் வென்றுள்ளனர். இதில், சென்னைக் காவல்துறையைச் சேர்ந்த 3 காவலர்கள் 4 தங்கப்பதக்கங்கள், 2 வெள்ளிப்பதக்கங்கள் உட்பட 7 பதக்கங்களை வென்றுள்ளனர். அவர்களைச் சென்னைக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உலக அளவிலான காவல்துறைக்கான தனது இரண்டாவது போட்டியில் 100 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம், நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கம் 3 என 3 தங்கமும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டப்பந்தயம் என இரண்டு வெள்ளிப் பதக்கம் உட்பட 5 பதக்கங்களை வென்றிருக்கிறார். இந்த போக்குவரத்து பெண் காவலர் பிரமிளா. தனக்குத் தனது உயர் அதிகாரிகள் உலக அளவிலான போட்டியின் பயிற்சிக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்ததால் மட்டுமே இவை எல்லாம் சாத்தியமானதாக அவர் கூறினார். அடுத்த வருடம் கனடாவில் நடக்கும் உலக அளவிலான போட்டிக்குத் தயாராகி வருவதாகவும் அதில், இதை விட இரு மடங்கில் பதக்கங்களை வெல்லப் போவதாகவும் உறுதி அளித்தார்.
அண்மைச் செய்தி: ‘பாஜகவுடன் மோதி விளையாடும் நிதிஷ்!’
சென்னை காவல்துறையின் சிறார் சீர்திருத்தப் பாதுகாப்பு மையத்தின் காவல் ஆய்வாளராக பணிபுரிபவர் சரவணன் பிரலு. இவர் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் வந்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். உலகளவிலான ஓட்டப் பந்தய போட்டியில் இது முதல் போட்டி எனவும் மற்ற நாடுகளைச் சேர்ந்த வீரர்களைப் பார்க்கும் போது தனக்குத் தயக்கம் இருந்தது. எனினும் களத்தில் இறங்கிய பின் வெல்வதற்கான உற்சாக தானாக வந்ததாகத் தெரிவித்தார்.
இது வரை உலக அளவிலான போட்டியில் 40 பதக்கங்களை வென்ற சென்னை குமரன் நகர் காவல் உதவி ஆய்வாளர் பாலுவிற்கு தற்போது 49 வயதாகிறது. இந்த போட்டியில் வெண்கலம் பதக்கத்தை வென்றுள்ளார். விளையாட்டின் மீதான ஆர்வத்தால் தான் இத்தனை பதக்கங்களை வெல்ல முடிந்தது என்கிறார். இவர் கடலூரில் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள சுரத்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். அங்கு இருக்கும் 40 ஏழை இளைஞர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளித்து அவர்களுக்குப் போலீசில் சேருவதற்கான பயிற்சி அளித்து வருகிறார். அவர் அதற்கான ஆசிரியர்கள் வைத்து சில தொண்டு நிறுவனத்தோடு சேர்ந்து இந்த உதவியைச் செய்து வருவதாகத் தெரிவித்தார்.
இது போன்று உலக அளவிலான போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்ற காவலர்களுக்கு 5 லட்சம் ரூபாய், வெள்ளி வென்ற காவலர்களுக்கு 3 லட்சம் ரூபாய் தமிழக அரசு வழங்கும் உத்தரவு உள்ளது. ஆனால் கடந்த 2016 ஆம் ஆண்டுக்குப் பின் அந்த தொகை வழங்கவில்லை அதனை உடனடியாக தர வேண்டும் எனப் பதக்கங்கள் வென்ற காவலர்கள் கேட்டுக் கொண்டனர்.
– ராகவேந்திரன், முதன்மை செய்தியாளர், சென்னை