தீபாவளி பண்டிகை; பாதுகாப்பு பணியில் 18,000 போலீசார்

சென்னையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 18,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. வருகிற 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு. பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்கும்…

சென்னையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 18,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

வருகிற 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு. பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்கும் வெளியூர் செல்வதற்கும் அதிகளவு கூடுவதால், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு. சென்னை பெருநகர காவல்துறை சார்பில், பல்வேறு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக சென்னையில் அதிகளவு கூடும் இடங்களான தி.நகர், பாண்டிபஜர், புரசைவாக்கம், மயிலாப்பூர், பூக்கடை வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் சென்னை பெருநகர காவல்துறை சார்பில்,

1.கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துதல்,

2.குற்ற தடுப்பு முறைகள்

3.போக்குவரத்தை நெரிசல் ஏற்படாமல் வாகனங்களை ஒழுங்குப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

சென்னையில் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களிலும் சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை மற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள் என சுமார் 18,000 போலீசார் ஈடுபட உள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புத்தாடைகள் மற்றும் பட்டாசு பொருட்கள் வாங்குவதற்கு அதிகளவு கூடும் இடங்களில், சென்னை பெருநகரில், தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், பூக்கடை ஆகிய பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேற்கண்ட 4 இடங்களிலும் 16 தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் (Watch Towers) அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு. நேரடியாகவும், பைனாகுலர் (Binocular) மூலமும் கண்காணித்து, குற்றச் செயல்கள் நடவாமல் தடுத்து வருகின்றனர்.

பழைய குற்றவாளிகளை கண்டுப்பிடிப்பதற்காக Face Recognition System (FRS) என்ற செல்போன் செயலி (Mobille App) மூலம் சுமார் 100 காவல் ஆளிநர்கள் சுழற்சி முறையில், FRS காவல் குழுக்களாக பிரிந்து கண்காணித்தும், வாட்சப் குழு தொடங்கி முக்கிய நிகழ்வுகள் உடனுக்குடன் பரிமாற்றம் செய்து, குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கப்பட்டு வருகிறது. தி.நகர். வண்ணாரப்பேட்டை மற்றும் பூக்கடை பகுதிகளில் கூடுதலாக 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, தற்காலிக காவல் கட்டுப்பாட்டறைகளில் கண்காணித்து வருகின்றனர்.

காவல்துறை நான்கு சக்கரம் (Patrol Vehicles) மற்றும் இருசக்கர சுற்றுக் காவல்
ரோந்து வாகனங்கள் (Motor Cycles Beats) மூலம் அடிக்கடி ரோந்து சுற்றி வந்து கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை மற்றும் பூக்கடை பகுதியில் 33 போக்குவரத்து இருசக்கர ரோந்து வாகனங்கள் (Traffic Marshal) மூலம் சுற்றுக் காவல் ரோந்து மேற்கொள்ளப்பட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பொதுமக்கள் கூடும் இடங்களிலும், சென்னையில் பொதுமக்கள் கூடும் இடங்களிலும், வணிக வளாகங்களிலும், (Shoping Malls) சென்னை பெருநகர காவல்துறையின் நடமாடும் உடைமைகள் சோதனை கருவி வாகனத்தின் (Mobile X-ray Baggage scanner vehicle) மூலம் சுழற்சி முறையில் சென்று பொதுமக்கள் உடைமைகள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. பொருட்கள் வாங்க வரும் பெண்களின் கழுத்திலுள்ள தங்க நகைகளை திருடப்படாமல் தடுக்க கழுத்தில் துணிகளை சுற்றி கவசமாக (Scarf) கட்டிக்கொள்ள வலியுறுத்தப்பட்டு. துணி கவசங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மருத்துவ குழுவினர்கள் அடங்கிய 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுடன் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பட்டாசு கடைகளின் அருகில் காவல்துறை சார்பில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டு, அசம்பாவிதங்கள் நிகழாமல் கண்காணித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.