குற்றவாளிகளை அடையாளம் காணவும், கண்காணிப்பு பணியிலும், கடலில் மூழ்கியவர்களை மீட்கவும் செய்யும் சூப்பர் போலிஸ் ட்ரோன்களை சென்னை காவல்துறை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
சென்னை காவல்துறை குற்ற செயல்களை கட்டுப்படுத்துவதற்கும் பாதுகாப்பு பணியில்
ஈடுபடுவதற்கும் பல்வேறு தொழில்நுட்பங்களை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.
அந்த வகையில் அளிலில்லா விமானங்கள் எனப்படும் ட்ரோன்களை பயன்படுத்தி
கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த தயாராகி வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னை காவல் துறை கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் ட்ரோன் காவல் நிலையம் அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டார். 3 கோடியே 60 லட்ச ரூபாய் மதிப்பில் டிரோன் காவல் நிலையங்கள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை அடையாறு காவல் மாவட்டத்தில் உள்ள சாஸ்திரி நகர் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட பகுதியில் ட்ரோன் காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ட்ரோன் காவல் நிலையத்தில் 20 காவலர்கள் செயல்படுவர். இந்த 20
காவலர்களும் பொறியியல் பட்டதாரிகள் ஆவர். இந்த காவல் நிலையத்தில் வேலை பார்க்க விருப்பமுள்ள தகுதியான காவலர்களை தேர்ந்துதெடுத்து பயிற்சி அளிக்கப்பட்டு
வருகிறது. இந்த 20 காவலர்களும் சுழற்சி முறையில் இரண்டு ஷிப்ட் அடிப்படையில் ட்ரோன் நிலையத்தில் செயல்பட உள்ளனர்
ட்ரோன் காவல் நிலையத்தில் 9 டெஸ்க்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு
ட்ரோன்களை கண்காணிக்கும் படி அமைக்கப்பட்டுள்ளது. இந்த காவல் நிலையத்தில் உள்ள கணினி மூலம் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் உள்ள தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ட்ரோன்கள் பறக்கும் பொழுதே அவை படம் பிடிக்கும் காட்சிகளை ஆய்வு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த ட்ரோன்களில் வாகனங்களின் நம்பர் பிளேட்டில் உள்ள எண்களை
கண்டறியவும், இரவு நேரங்களில் இருட்டான பகுதிகளில் காட்சி பதிவு செய்யும்
வகையில் தெர்மல் விஷன் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால்
முக்கியமான விழா காலங்களிலும் ,கூட்டம் அதிகமாக கூடும் நிகழ்வுகளிலும் மக்கள்
கூடும் எண்ணிக்கையை கணக்கிடும்படியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. உடனடியாக கூட்டம் அதிகமான இடத்தை கட்டுப்படுத்துவதற்காக களத்தில் இருக்கும் காவலர்களுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ள உதவும்.
ஒருவேளை இது போன்ற கூட்ட நெரிசலான இடங்களில், விழா காலங்களில் திருட்டு
சம்பவங்கள் நடைபெறும் பொழுது பாதிக்கப்பட்டவர்கள் கட்டுப்பாட்டு அறையான 100
எண்ணுக்கு தொடர்பு கொள்வார்கள் ,அப்போது உடனடியாக அவர்கள் கூறும் தகவல்களை
அடிப்படையாக வைத்து அந்த இடத்தில் கண்காணிப்பில் இருக்கும் ட்ரோன் கேமராக்கள்
பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கும் பகுதிக்கு பறக்கவிட்டு போலீசார் திருடனை
கண்டுபிடிக்க உதவும் வகையில் செயல்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த ட்ரோன்கள் அமைப்பிற்கு ஏற்ப குறைந்தபட்சம் 30 நிமிடத்தில் இருந்து 45 நிமிடம்
வரை பறந்து செயல்படும் தன்மை கொண்டவை. அது மட்டும் அல்லாது சுமார் 15 முதல் 20
கிலோ அளவிலான எடையை தூக்கிச் செல்லும் தன்மை கொண்டவை ஆகவும்
இருக்கும்.10மடங்கு zoom செய்து பெரிதாக காட்டும் கேமரா உள்ளது. மேலும் பவர்
கனெக்சன் மூலமாக தொடர்ந்து செயல்ப்படும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த காவல் நிலையத்தில் பயன்படுத்தப்படும் அதிநவீன ஒன்பது ட்ரோன்கள் ஒரே
மாதிரியான மென்பொருட்கள் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதன் ஹார்டுவேர் என்ற அடிப்படையில் ட்ரோன்கள் அமைப்பிற்கு ஏற்ப மூன்று
வகையாக உள்ளன. அதில் முதல்வகை குயிக் ரெஸ்பான்ஸ் ட்ரோன் அல்லது சர்வைலன்ஸ் ட்ரோன் என்று அழைக்கப்படும் ட்ரோன்கள் எண்ணிக்கை தற்போது 6 ஆக உள்ளது. இவை அதிக தூரம் சென்று கண்கணிக்கும் திறன் கொண்ட சிறிய ரக ட்ரோன்கள் சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவு வரை பறக்கும் தன்மை கொண்டவை.
மேலும், இந்த சிறிய ரக ட்ரோன்கள்,ஜனாதிபதி, பிரதமர் ,மத்திய அமைச்சர்கள் ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்ட மிகவும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் வரும்பொழுது
அவர்கள் செல்லும் சாலையில் முன்கூட்டியே பறக்கவிடப்படுகிறர்து. அத்துடன், பாதுகாப்புடன் செல்லும் வழி உள்ளதா, வாகன போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்கிறதா மற்றும் குற்ற செயல் புரிந்தவர்கள் யாரேனும் நடமாட்டம் உள்ளதா உள்ளிட்ட பல்வேறு கண்கானிப்பு பணியில் நொடிப் பொழுதில் பறந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.
அரை மணி நேரம் தொடர்ந்து பறக்கும் தன்மை கொண்ட இந்த சிறிய ரக ட்ரோன்கள்,
ரோந்து காவல் வாகனங்களுடன் சென்று கூட்டம் அதிகமாக இருக்கும் நிகழ்வுப்
பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும். குறிப்பாக காவல் ரோந்து வாகனங்களில்
பவர் பேக்கப்கள் உள்ளதால் தொடர்ந்து பறக்க விட்டு கண்காணிக்கும் வகையில்
சார்ஜ் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏரோபிளேன் வடிவிலான 2 ட்ரோன்கள் 120 மீட்டர் உயரம் வரை பறந்து 15 கிலோமீட்டர்
தூரம் வரை சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபடும் தன்மை கொண்டவை. இவை 45 நிமிடம் தொடர்ந்து பறந்து கண்காணிப்பில் ஈடுபடும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டு உள்ளது. மிக உயரத்தில் அதிக அளவு மக்கள் கூட்டம் உள்ள இடங்களில் நீண்ட நேரம் கண்காணிப்பு பணியில் பயன்படுத்துவதற்கு இந்த வகை ட்ரோன்கள் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
மூன்றாவது வகையாக உள்ள ட்ரோனகள் 15 முதல் 20 கிலோ அளவிலான எடைகளை தூக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை கடற்கரை பகுதிகளில் கடலில் யாரேனும் சிக்கி மூழ்கிக் கொண்டிருந்தால் உடனடியாக இதுபோன்ற ட்ரோன்கள் பறக்கவிட்டு கடல் நீரில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நபரை தெள்ளத்தெளிவாக அடையாளம் கண்டுபிடிக்கும் வகையில் மென்பொருள்கள் பொருத்தப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் உயிர்காக்கும் inflatable lifebuoy வட்ட வடிவ பலூனை தத்தளித்துக் கொண்டு இருக்கும் நபருக்கு கிடைக்கும் வகையில் செய்து காப்பாற்ற உதவும்.இந்த inflatable lifebuoy 180 முதல் 200 கிலோ வரை தாங்கும் திறன் கொண்டவை எனவும் தெரிவித்துள்ளனர்.
கடற்கரையோர பகுதியில் இது போன்ற ட்ரோன்கள் வைக்கப்பட்டு கடலில் யாரேனும்
சிக்கும் பொழுது உடனடியாக பறந்து சென்று காப்பாற்றும் நடவடிக்கையில்
காவல்துறைக்கு விரைந்து உதவும் வகையில் ட்ரோன்கள் செயல்படும் என சென்னை
காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், எடை தூக்கும் டிரோன்கள் வெள்ளம் மற்றும் புயல் காலங்களில் மனிதர்கள்
நெருங்க முடியாத இடங்களில் பறந்து சென்று பொருட்களையும், மருந்துகளையும்
எடுத்து சென்று கொடுப்பதற்கு பயன்படும். இது போன்ற ட்ரோன்கள் 30 நிமிடத்தில்
இருந்து 45 நிமிடம் வரை பறக்கும் தன்மை கொண்டவை.
மேலும், சென்னையில் 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் ஆளில்லா
விமானங்கள் பறக்க கூடாத சிவப்பு மண்டலங்கள் மற்றும் அனுமதி பெற்று
பறக்கக்கூடிய ஆரஞ்சு நிற மண்டலங்கள், பறக்க கட்டுப்பாடுகள் இல்லாத பச்சை நிற
மண்டலங்கள் என உள்ளன.
ராஜ் பவன், தலைமைச் செயலகம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் சிவப்பு
மண்டலங்களுக்குள் அடங்கும். அதுபோன்ற இடங்களை இந்த ட்ரோன்கள் நெருங்கும்போது தானாக அறிந்து அந்தப் பகுதிகளில் பறக்காத படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் பேட்டரிகள் மற்றும் சார்ஜுகள் குறையும் பொழுது மீண்டும் ட்ரோன்கள் கிளம்பி புறப்பட்டுச் சென்ற இடத்திற்கே வரும்படி ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு ட்ரோன் கேமராக்களுக்கு விதித்துள்ள சட்டத்திட்டங்களை பின்பற்றி
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் பதினைந்து நாட்களில் ட்ரோன் காவல் நிலையத்தை முன்னோட்ட அடிப்படையில் செயல்படுத்தி செயல்முறை பிரச்சனைகளை ஆய்வு செய்து தீர்க்கபப்ட்டு, முழுமையாக தயார் செய்து மக்களின் பயன்பாட்டிற்கு செயல்படுத்துவதற்காக தமிழக முதல்வர் இந்த காவல் நிலையத்தை திறந்து வைக்க முழு வீச்சில் தயார்படுத்தப்பட்டு வருவதாக சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.