சென்னையில் அமைந்துள்ள தேசிய புலனாய்வு முகமை அமைப்பு அலுவலகத்தை அதன் காவல் நிலையமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பயங்கரவாதம் தொடர்புடைய குற்றங்களை விசாரிப்பதற்காக கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை புரசைவாக்கத்தில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பு அலுவலகம் ஒன்று நிறுவப்பட்டது. பொதுவாக பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சக எழுத்துப்பூர்வ அறிவிப்பின் கீழ் அதிகாரம் பெற்றிருந்தாலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த மாநில அரசின் அனுமதி தேவைப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் சென்னை என்.ஐ.ஏ அலுவலகத்தை காவல் நிலையமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு என்.ஐ.ஏ சார்பில் மனு அளித்தும் பரிசீலிக்கப்படாமல் கிடப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பி.எப்.ஐ உட்பட 15 வழக்குகளை டெல்லி தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் வழக்குப்பதிவு செய்து, சென்னை என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அமைப்பு அலுவலகத்தை, அதன் காவல் நிலையமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து தமிழக உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் தமிழகத்தில் நடைபெறும் பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளை தேசிய புலனாய்வு அமைப்பின் சென்னைக் கிளை வழக்குப்பதிவு செய்து விசாரிக்கும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளார். இதனால் ஏற்கனவே நிலுவையில் இருக்கக்கூடிய தமிழக வழக்குகளை சென்னைக் கிளை பெற்று விசாரணை நடத்த இருப்பதாக என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.