வலிமை படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்கள் தனது படத்தின் தழுவலே என ‘மெட்ரோ’ பட தயாரிப்பாளர் ஜெயகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்த வலிமை திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மாதம் வெளியானது. தற்போது திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு கொண்டிருக்கும் வேளையில் புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது. போதை பொருளால் தவறான வழியில் செல்லும் இளைஞர்கள், ஆடம்பர வாழ்க்கைக்கு எவ்வாறு அடிமையாகிறார்கள், பெற்றோர்கள் செய்ய வேண்டியவை என்ற கருப்பொருளை வைத்து உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்தில் நடிகர் அஜித் காவல்துறை அதிகாரியாக கனகச்சிதமாக நடித்திருப்பார். இந்நிலையில் எனது படத்தின் கதை, கதாபாத்திரங்களை அனுமதியின்றி பயன்படுத்தி வலிமை படம் எடுக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ திரைப்பட தயாரிப்பாளர் ஜெயக்கிருஷ்ணன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் இயக்குனர் ஹெச்.வினோத் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு்ள்ளது. வசதியான வாழ்வுக்காக, சங்கிலி பறிப்பு, போதைப் பொருள் கடத்தலில் தம்பிக்கு தொடர்புள்ளதை அறிந்து கொள்ளும் கதாநாயகன், தம்பியை கொல்வது போல மெட்ரோ திரைப்படத்தில் படமாக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த மனுவில், மெட்ரோ திரைப்படத்தை பிற மொழிகளில் தயாரிக்க உள்ள நிலையில், அதே கதை, கதாபாத்திரங்களுடன் வலிமை படம் படமாக்கப்பட்டுள்ளதால் பெரிய அளவு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரு தரப்பையும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை மார்ச் 17 ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.







