கலைஞரின் 99வது பிறந்த நாளை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள சென்னை மலர் கண்காட்சியை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்தநாளான இன்று தமிழகமெங்கும் திமுக தொண்டர்கள் வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி தமிழ்நாடு அரசு புதிய முயற்சியாக சென்னையில் மலர் கண்காட்சியை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இதில் புனே, பெங்களூரு, ஊட்டி, ஒசூர், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட வகையிலான மலர்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
கருணாநிதி உருவ வடிவில் மலர் அலங்காரம் மற்றும் திமுக அரசின் ஓராண்டு சாதனையை விளக்கும் வகையில் இந்த மலர் கண்காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சியை இன்று முதல் 5 ஆம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிட தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
சென்னை மாநகரில் முதன்முறையாக கலைவாணர் அரங்கில் அமைக்கப்பட்டுள்ள இந்த மலர்க் கண்காட்சியை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உடன் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மா.சுப்பிரமணியன், துணை சபாநாயகர் பிச்சாண்டி ஆகியோர் இருந்தனர்.








