விசாரணையின்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்: சென்னை காவல் ஆணையர் உத்தரவு

விசாரணை மற்றும் போலீஸ் காவலின்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக அனைத்து கூடுதல், இணை மற்றும் துணை ஆணையர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், விசாரணையின் போதும்,…

விசாரணை மற்றும் போலீஸ் காவலின்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக அனைத்து கூடுதல், இணை மற்றும் துணை ஆணையர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், விசாரணையின் போதும், போலீஸ் காவலின் போதும் காவல்துறையினர் விதிகளை மீறி நடப்பதாகவும், வழக்குகளின்போது பறிமுதல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்களை முறையாக பராமரிப்பதில்லை என்றும் தொடர் புகார்கள் வருவதாக குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, கைதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் பணம், தங்கம், சொத்துகள் பற்றிய தகவலை முறையாக விசாரணை அதிகாரி பதிவு செய்திருக்க வேண்டும் என சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட நபரிடம் பறிமுதல் செய்யப்பட்டதற்கான ஒப்புதல் சீட்டை விசாரணை அதிகாரி பெற்றிருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். கைதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை form 91-ஐ பூர்த்தி செய்து தாமதமில்லாமல் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

விசாரணையின்போது எந்த விதமான தவறும் இனி ஏற்படாதவாறு நடந்து கொள்ள வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் சங்கர் ஜிவால் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இந்த சுற்றறிக்கையை அனைத்து கூடுதல், இணை, துணை ஆணையர்கள், விசாரணை அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.