தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாகப் பெய்துவரும் நிலையில் சென்னை, திருநெல்வேலி, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதியில் மேற்கு நோக்கி நகர்ந்து வரும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வரும் 18ஆம் தேதி தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழ்நாடு இடையே கடந்து செல்லும் என அறிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இதன் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என அறிவுறுத்தியது.
மேலும் சென்னைக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் இரண்டு நாட்களுக்கு தேவையான பால், குடிநீர், உணவு ஆகியவற்றை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.







