காசோலை மோசடி வழக்கு; இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை உறுதி!

காசோலை மோசடி வழக்கில், இயக்குனர் லிங்குசாமிக்கு விதிக்கப்பட்ட 6 மாதங்கள் சிறை தண்டனை உறுதி செய்து  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இயக்குநர் லிங்குசாமி நான் ஈ, இரண்டாம் உலகம் படங்களைத் தயாரித்த…

காசோலை மோசடி வழக்கில், இயக்குனர் லிங்குசாமிக்கு விதிக்கப்பட்ட 6 மாதங்கள் சிறை தண்டனை உறுதி செய்து  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இயக்குநர் லிங்குசாமி நான் ஈ, இரண்டாம் உலகம் படங்களைத் தயாரித்த பி.வி.பி. பைனான்ஸ் நிறுவனத்திடமிருந்து 2014-ல் நடிகர் கார்த்தி, நடிகை சமந்தா நடிப்பில் “எண்ணி ஏழு நாள்” என்ற படத்தைத் தயாரிப்பதற்காக, ஒரு கோடியே 3 லட்சம் ரூபாய் தொகையைத் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்காகக் கடனாகப் பெற்றுள்ளார்.

அப்போது கொடுத்த 35 லட்சம் ரூபாய்க்கான காசோலைக்கு லிங்குசாமி வங்கிக் கணக்கில் பணமில்லாமல் திரும்பியதால், பிவிபி நிறுவனம் தரப்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து 2022 ஆகஸ்ட் 22ம் தேதி தீர்ப்பளித்தது. மேலும், பிவிபி நிறுவனத்திடம் பெற்ற கடனை வட்டியுடன் சேர்த்து திருப்பி செலுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது.

சைதாப்பேட்டை நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து லிங்குசாமி தரப்பில் சென்னை  மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து, லிங்குசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.