பஞ்சாப் மாநிலத்தின் 16 வது முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி இன்று பதவி ஏற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பஞ்சாப் மாநிலத்தில், அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆளுங்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. நீண்ட நாட்களாக மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சித்துவுக்கும் கருத்து வேறுபாடு நிலவி வந்தது.
இதனிடையே காங்கிரஸ் மாநில தலைவராக சித்து நியமிக்கப்பட்டார். இதையடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி விமர்சனம் செய்து வந்தனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சிக்குள் ஒற்றுமை இல்லாதது காங்கிரஸ் கட்சிக்கும் பெரும் தலைவலியாக மாறியது. இதனிடையே, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் தலைவர் சித்து அறிவித்தார். இதனால், அதிருப்தியடைந்த அமரீந்தர் சிங் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், சண்டிகரில் நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில், அடுத்த முதலமைச்சராக சரண் ஜித் சன்னி நேற்று தேர்வு செய்யப்பட்டார். இவர் அம்ரீந்தர்சிங் அமைச்சரவையில், ஏற்கனவே தொழில்நுட்ப கல்வித்துறை அமைச்சராக பணியாற்றி யவர்.
புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள சரண்ஜித் சிங் சன்னி, இன்று காலை 11 மணியளவில் பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை அவர் முதலமைச்சராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அவருடன் சுக்ஜிந்தர் சிங் ரந்தவா மற்றும் ஓம் பிரகாஷ் சோனி ஆகியோர் துணை முதலமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சித்து உட்பட பலர் கலந்து கொண் டனர். முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் கலந்து கொள்ளவில்லை. புதிய முதலமைச் சராக பதவியேற்றுக்கொண்ட சரண்ஜித் சிங் சன்னிக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரி ல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.








