சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் நீள்வட்டப் பாதைக்குள் நுழைந்ததாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கி பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக 615 கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. புவி சுற்று வட்டப்பாதையில் இது அன்றைய தினமே நிலைநிறுத்தப்பட்ட நிலையில், படிப்படியாக விண்கலம் அடுத்தடுத்த சுற்றுப்பாதைகளுக்கு உயர்த்தப்பட்டது.
கடந்த ஜூலை 31-ம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் 5-வது கட்டமாக சந்திரயான் விண்கலத்தின் சுற்று வட்டப்பாதை உயர்த்தப்பட்டது. மேலும் விண்கலம் 127609 km x 236 km சுற்றுவட்டப்பாதையை அடைந்ததாக இஸ்ரோ அறிவித்தது. விண்கலம் 5 அடுக்கு கொண்ட புவி வட்டத்தின் சுற்றுப் பாதையை நிறைவு செய்துவிட்டு நள்ளிரவு 12 முதல் 1 மணி இடையே நிலவின் நீள்வட்டப் பாதையை நோக்கிய பயணத்தை தொடங்கியது.
https://twitter.com/isro/status/1687829587018100736
இதனை அடுத்து சந்திரயான்-3 ஆகஸ்ட் 5, 2023இல் சந்திர சுற்றுப்பாதை முழுதாக செல்ல திட்டமிடப்பட்டிருப்பதாக அண்மையில் இஸ்ரே தெரிவித்தது. அதன்படி மாலை 7.15 மணிக்கு சந்திரயான் 3 நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது. மேலும் அடுத்தகட்ட பணியாக சுற்றுவட்டப்பாதையின் குறைப்பு நாளை இரவு 11 மணிக்கு தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
திட்டமிட்டபடி முயற்சிகள் வெற்றிபெறும்பட்சத்தில், ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவின் மேற்பரப்பில் சந்திரயான்-3 லேண்டரை மென்மையாக தரையிறக்க உள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.







