தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்று (14.05.2023) வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய அதி தீவிர “மோக்கா” புயல் நேற்று மதியம் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கரையை கடந்தது. மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 19ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல், அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக் கூடும் என கூறப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் மோக்கா புயல் கரையை கடந்தாலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடிப்பதால், தமிழ்நாட்டின் அருகே சூழ்ந்துள்ள ஈரப்பதம் இழுக்கப்பட்டு வெப்பநிலை அதிகரிக்கும். இதனால் அதிக வெப்பநிலை இருக்கும் போது வெப்ப அழுத்தம் காரணமாக சிலருக்கு அசவுகரியம் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டம், கீழச்செருவாய் பகுதியில் 4 செமீ மழையும், பெரம்பலூர் மாவட்டம் அகரம் சீகூர் பகுதியில் 1 செமீ மழையும் பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்றும், நாளையும் தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் இலங்கை கடலோரப்பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இன்று தொடங்கி 17-ஆம் தேதி வரை தெற்கு அரபிக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா