தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 29ம் தேதி தொடங்கியது. இதையடுத்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக இன்று வலுப்பெற்றுள்ளது.
இதுகுறித்து, சென்னை தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் கே.பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறை, கொள்ளிடத்தில் 13 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்து வரும் 3 நாட்களுக்கு மழை தொடரும். 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்றின் வேகம் இருக்கும். சென்னை நுங்கம்பாக்கத்தில் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் இன்று வரை 247 மில்லி மீட்டர் பழை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 3% சதவிகிதம் குறைவு. சென்னையில் பதிவான அளவு 509 மில்லி மீட்டர். இது இயல்பை விட 20% அதிகம். காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு கொடுக்கப்பட்டு இருந்த ரெட் அலர்ட் திரும்ப பெறப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நவம்பர் 11ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கும், பல இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.








