அரியலூர் மாவட்டம் கண்டராதித்தம் கிராமத்தில் உள்ள செம்பியன் மாதேவி பேரேரியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என 20 கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் கண்டராதித்தம் கிராமத்தில் உள்ளது செம்பியன் மாதேவி பேரேரி. பராந்தக சோழனின் இளைய மகன் கண்டராதித்தன் தனது இரண்டாவது மனைவி செம்பியன் மாதேவியின் விருப்பத்தை ஏற்று, வெட்டிய ஏரிதான் செம்பியன் மாதேவி பேரேரி.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கொள்ளிடம் ஆற்று நீரையும், மழைக்காலங்களில் உபரிநீரையும் சுமந்து வரும் நந்தியாறும், கூழையாறும்தான் இந்த ஏரிக்கான நீர்வரத்து. இந்த ஏரியிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம், 20 கிராமங்களில் உள்ள விவசாயிகள், முப்போகம் விவசாயம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், தற்போது இந்த ஏரி தனது அடையாளத்தைத் தொலைத்து நிற்பதாகக் கூறுகின்றனர் அப்பகுதி விவசாயிகள். செம்பியன் மாதேவி பேரேரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினால், பல பெருமைகளை அடைகாத்து நின்ற செம்பியன் மாதேவி பேரேரியை பாதுகாக்க, தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, அந்த ஏரியை நம்பியுள்ள 20 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் விருப்பமாக உள்ளது. சுமார் 2 டி.எம்.சி தண்ணீர் வரை தேக்கி வைக்கலாம் என்கிறார் ஓய்வுபெற்ற புவியியலாளர் சந்திரசேகர்.
மேலும் பாரம்பரிய சின்னங்களைக் காக்க மகாராஷ்டிராவும் ஒன்றுபட்ட ஆந்திர மாநிலமும் சிறப்புச் சட்டங்களை இயற்றி பாரம்பரிய கட்டிடங்கள், ஏரி, குளங்கள், காடுகள், ஆறுகள், நீர்த்தேக்கங்களைப் பாதுகாத்து வருவதுபோல் தமிழ்நாட்டிலும் பாரம்பரிய சின்னங்களைப் பாதுகாக்கச் சட்டம் இயற்ற வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.