மியான்மரில் சிக்கித் தவிக்கும் 50 தமிழர்கள் உள்பட சுமார் 300 இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், அவர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மியான்மருக்கான இந்தியத் தூதர் வினய் குமாரிடம் பேசியிருக்கிறோம். அனைத்து இந்தியர்களை மீட்கத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். மேலும் சூழ்நிலையையும் என்னிடம் எடுத்துரைத்தார். கூடிய விரைவில் இந்தியர்கள் மீட்கப்படுவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
https://twitter.com/MOS_MEA/status/1572523403546095616
முன்னதாக, முதலமைச்சர் ஸ்டாலின் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டிருந்ததாவது:
மியான்மரில் சுமார் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆட்பட்டிருப்பதாக மாநில அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது என்பதை இந்திய பிரதமரின் உடனடி கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். அவர்கள் ஆரம்பத்தில் தனியார் ஆள்சேர்ப்பு முகமைகள் மூலம் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான வேலைகளுக்காக தாய்லாந்து நாட்டிற்குச் சென்றதாகத் தெரிய வருகிறது.
ஆன்லைனில் சட்ட விரோத வேலைகளை மேற்கொள்ளும் பொருட்டு அவர்கள் தாய்லாந்தில் இருந்து மியான்மருக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
மேலும், அவர்கள் அத்தகைய சட்டவிரோத வேலைகளை செய்ய மறுத்ததால் வேலை அளிப்பவர்களால் கடுமையாகத் தாக்கப்படுகிறார்கள் என்று தகவல் வருகிறது என்று முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களில் 17 தமிழர்களுடன் மாநில அரசு தொடர்பில் உள்ளதாகவும், அவர்களை விரைவாக மீட்பதற்கு அரசின் உதவியை நாடுகின்றனர் என்றும், மியான்மரில் சட்டவிரோதமாக சிறை பிடிக்கப்பட்டுள்ள நமது குடிமக்களின் அவலநிலையைக் கருத்தில் கொண்டு உடனடியாக அவர்களை மீட்பதற்கும், பாதுகாப்பாக தாயகத்திற்கு திரும்ப அழைத்து வரவும், மியான்மரில் உள்ள தூதரகத்திற்கு இப்பிரச்சினை குறித்து விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும் என்றும், இது தொடர்பாக பிரதமரின் அவசர தலையீட்டை கோருகிறேன் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.








