பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு தயார் – மல்யுத்த வீராங்கனைகளுக்கு அனுராக் தாக்கூர் அழைப்பு!

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடா்பான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகளை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். இந்திய மல்யுத்த சம்மேளன…

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடா்பான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகளை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் புகார் தெரிவித்த மல்யுத்த வீராங்கனைகள், டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து போராடி வருகின்றனர்.

கடந்த மே 28 ஆம் தேதி புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகளை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.  மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் இந்த கைது நடவடிக்கைக்கு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், பதக்கங்களை கங்கை நதியில் வீசுவோம் என்று மத்திய அரசுக்கு வீராங்கனைகள் எச்சரிக்கை விடுத்தனர். அதன்படி, சர்வதேச போட்டிகளில் வென்ற பதக்கங்களை கங்கையில் வீசுவதற்காக, மல்யுத்த வீராங்கனைகள் உத்தரப்பிரதேச மாநிலம் ஹரித்வார் சென்றனர். அங்கு விவசாய சங்கத் தலைவர்கள் வீராங்கனைகளை சமாதானம் செய்ததால் பதக்கங்களை கங்கையில் வீசுவதை கைவிட்டனர்.

இதற்கிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மல்யுத்த வீரா்கள் சந்தித்தனர். இதையடுத்து, திங்கள்கிழமை காலை மல்யுத்த வீரர்கள் தாங்கள் வகிக்கும் ரயில்வே பணிகளில் திரும்பவும் இணைந்தனர்.

இதுகுறித்து விளக்கமளித்த அவர்கள், “ரயில்வே துறையில் தாங்களுக்கு அளிக்கப்பட்ட அலுவல் சாா் பணிகளை நிறைவேற்றவே பணியில் இணைந்தோம். பிரஜ் பூஷணை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும்” எனத் தெரிவித்தனர்.

https://twitter.com/ianuragthakur/status/1666162525019443200

இந்நிலையில், மல்யுத்த வீரர், வீராங்கனைகளை பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது ட்விட்டர் பக்கத்தில் ”பிரச்னைகள் தொடர்பாக மல்யுத்த வீரர், வீராங்கனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. மல்யுத்த வீரர், வீராங்கனை பேச்சுவார்த்தைக்கு வருமாறு நான் மீண்டும் அழைக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள சாக்‌ஷி மாலிக், போராட்டம் நடத்திய அனைத்து வீரர்களுடனும் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.