இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள ஒபிசி பிரிவினருக்கு மத்திய அரசு முக்கியத்துவம் வழங்க மறுக்கிறது என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
மகளிர் இடஒதுக்கீடு மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்ததாவது..
மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக அமல்படுத்த வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரயறை முடிந்த பின்னரே மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வரும் என சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டு கட்டுப்பாடுகளையும் உடனே நீக்க வேண்டும்.
மக்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்க உடனடியாக சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதேபோல ஏற்கனவே நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு விபரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும். நாட்டின் பெரும்பாலான பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எந்தவித அதிகாரமும் வழங்கப்படுவது இல்லை.
மத்திய அரசில் உள்ள 90 துறை செயலாளர்களில் 3 பேர் மட்டுமே ஒ.பி,.சி. பிரிவை சேர்ந்தவர்கள். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க மத்திய பாஜக அரசு மறுக்கிறது.
நாட்டின் ஒட்டுமொத்த பட்ஜெட் மதிப்பில் 5 சதவிகித நிதி மீது தான் ஒபிசி அதிகாரிகளால் முடிவு எடுக்கும் சூழல் உள்ளது. நிதியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற அதிகாரமே முன்னேறிய சாதிகளிடம் தான் உள்ளது. நாட்டின் பெரும்பான்மையாக உள்ள ஒபிசி பிரிவினர் ஆட்சி அதிகாரத்தில் புறக்கணிக்கப்படுகின்றனர்.
ஒவ்வொரு பிரிவிலும் எத்தனை கோடி பேர் இருக்கின்றனர் என்பதை சாதிவாரி கணக்கெடுப்பு மூலமே உறுதி செய்ய முடியும். மகளிர் இடஒதுக்கீடு சட்டம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடைமுறைப்படுத்தப்படும் என்பதன் பின்னணியில் பெரிய திட்டம் உள்ளது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.







