தமிழகத்தில் நாளை சட்டப்பேரவைத் தேர்தலின்போது வாக்குப்பதிவு மையங்களில் செல்போன்கள் பயன்படுத்தக் கூடாது என சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் தேர்தல் பாதுகாப்பு பணியில் 23 ஆயிரத்து 500 போலீசார் ஈடுபடுத்தப்படுவர் என்றார்.
சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்படும் என்ற மகேஷ்குமார் அகர்வால் சென்னையில் 327 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனத் தெரிவித்துள்ளார். வாக்குப்பதிவு மையங்களில் செல்போன்கள் பயன்படுத்தக் கூடாது என்றும் மதுபானங்கள் விற்பனை, கடத்தலை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சமூக வலைத்தளங்களில் விதிகளை மீறி பரப்புரை செய்யப்படுவதை சைபர் பிரிவு கண்காணிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்கள் வாக்களிக்க தைரியமாக வர வேண்டும் எனத் தெரிவித்த மகேஷ்குமார் அகர்வால், அதற்கான முழு பாதுகாப்பு ஏற்பாட்டையும் செய்துள்ளதாகக் கூறினார். 3,000 சிசிடிவி கேமராக்கள் மூலம் வாக்குப்பதிவு மையங்களை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மகேஷ்குமார் அகர்வால் குறிப்பிட்டார்.







