இளம் காதல் ஜோடியிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள மல்லாங்கிணறு பகுதியை சேர்ந்தவர் முத்துச்செல்வம் (24). இவர் ஜவுளிக்கடை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் காதல் ஜோடி இருவரும் கடந்த 26 ஆம் தேதி இரவு
இருசக்கர வாகனத்தில் அருப்புக்கோட்டைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அருப்புக்கோட்டை சாலையில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது இயற்கை உபாதையை கழிப்பதற்காக இருசக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளனர். அப்பொழுது சாலையோர புதருக்குள் இருந்து முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் இளம் காதல் ஜோடியை கத்தியை காட்டி மிரட்டி இருவரின் கையில் வைத்திருந்த செல்போன்களை பறித்து விட்டு மீண்டும் புதருக்குள் சென்று மாயமாகி உள்ளார்.
அதிர்ச்சி அடைந்த காதலர்கள் இருவரும் சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சூலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் காதலர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர் பாலவனத்தம் பகுதியை சேர்ந்த மாரிச்செல்வம் என்பது தெரியவந்தது. இதை அடுத்து மாரிச்செல்வத்தை கைது செய்த சூலக்கரை போலீசார் அவரிடம் இருந்து இரண்டு செல்போனையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.