திருச்சி மாவட்டதை சேர்ந்த நித்திய செளமியா உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தமிழகத்திலுள்ள காடுகளில் விலங்குகளை கொன்று உடலை கடத்துவது குறித்து சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரிக்க கோரி வலியுறுத்தியிருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் விசாரித்தனர்.
மனுதாரர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் எறும்பு தின்னி ஓடுகள், சிறுத்தை நகங்கள், யானை தந்தங்கள் ஆகியவை தமிழ்நாட்டில் சமீபத்தில் கடத்தப்படுவதாக தெரிவித்தார். மேலும் இதனை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை துறை இயக்குநர், தமிழ்நாடு வனவிலங்கு குற்ற கட்டுப்பாட்டு பணியகத்தின் இயக்குநர் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர். மேலும் வழக்கு விசாரணையை மார்ச் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.







