முல்லைப் பெரியாறு அணைக்கான மின் இணைப்பை கேரள மின்சாரத்துறை அமைச்சர் எம்.எம்.மணி தொடங்கி வைத்தார்.
தமிழக பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப் பெரியாறு அணைக்கு வல்லக்கடவில் இருந்து கேரள மின்வாரியம் மூலம் மின் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. அணைப் பகுதிக்கு வந்த மின்கம்பியில் சிக்கி கடந்த 2000ம் ஆண்டில் யானை பலியானதைத் தொடர்ந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில், மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி கேரள உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. மேலும் 1 கோடியே 65 லட்சம் ரூபாயை கேரள மின் வாரியத்திற்கு தமிழக அரசு செலுத்தியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வல்லக்கடவில் இருந்து முல்லைப் பெரியாறு அணைப்பகுதி வரை மின்கேபிள் பதிக்கும் பணியானது கடந்த 4ஆம் தேதி முடிவடைந்தது. இந்த நிலையில் மின் இணைப்பு வழங்குவதற்கான துவக்க விழா கேரள மாநிலம் வண்டிப்பெரியாறில் இன்று நடைபெற்றது. கேரள மாநில மின்சாரத்துறை அமைச்சர் எம். எம். மணி, மின் இணைப்பை தொடங்கி வைத்தார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு முல்லைப் பெரியாறு அணைக்கு மின் இணைப்பு வழங்கியது தமிழக விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தனது கோரிக்கையை ஏற்று, முல்லைப் பெரியாறு அணைக்கான மின் இணைப்பை வழங்கிய கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் சார்பாகவும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.