மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அருகே கழிவுநீர் கால்வாயில் தொப்புள் கொடியுடன் சிசுவின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்தமிழகத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனைகளில் ஒன்றான மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு பல்வேறு பகுதிகளிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். மேலும் குழந்தைகள் சிறப்புப்பிரிவு, தாய் சேய் நல மருத்துவ சிகிச்சை, குழந்தை மகப்பேறு என தனி சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அந்த மருத்துவமனைக்கு எதிரேயுள்ள கழிவுநீர் கால்வாயில் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் பச்சிளங்குழந்தை தொப்புள்கொடியோடு சடலமாக கிடந்துள்ளது. இதை பார்த்த பொதுமக்கள் காவல் துறையினரிடம் தகவல் அளித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பச்சிளங்குழந்தையின் உடலை மீட்டனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர். மதுரை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் ஐந்துக்கும் மேற்பட்ட பச்சிளங்குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு பச்சிளங்குழந்தை கழிவுநீரில் வீசப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







