போக்குவரத்து துறை நியமன முறைகேடு புகார் தொடர்பாக தற்போதைய மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் இருவர் மீது மேலும் நடவடிக்கை எடுக்க அமலாக்கத் துறைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் செந்தில் பாலாஜி சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கு பின்னணி
கடந்த 2011 முதல் 2015ம் ஆண்டு வரை போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்த செந்தில் பாலாஜி, ஓட்டுநர் மற்றும் நடத்துனர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார், 3 வழக்குகளைப் பதிவு செய்தனர்.
இந்த வழக்குகள் எம்.பி – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இதற்கிடையில், இந்த மோசடியில் சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக, செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கப் பிரிவும் 2021ம் ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணைக்காக ஆஜராகும்படி அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியிருந்தது.
இந்த சம்மனை எதிர்த்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மாநில போலீசார் தாக்கல் செய்த வழக்குகளின் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்துள்ள நிலையில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அமலாக்கப் பிரிவு கோரிய ஆவணங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கப் பிரிவு அனுப்பிய சம்மனை ரத்து செய்து உத்தரவிட்டனர்.








