அரசு பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய மாட்டேன் என கூறிய மூதாட்டி மீது எந்த வழக்கும் பதிவும் செய்யப்படவில்லை என கோவை மாவட்ட எஸ்பி பத்ரிநாரயணன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காந்திபுரத்தில் இருந்து பாலத்துறைக்கு சென்ற அரசு இலவச மகளிர் பேருந்து, மதுக்கரை மார்க்கெட் அருகே வந்தபோது துளசியம்மாள்(68) என்ற மூதாட்டி, பேருந்தில் ஏறினார். டவுன் பஸ்சில் பயணிக்க பெண்களுக்கு டிக்கெட் இலவசம் என்பதால், கண்டெக்டர் பஸ்சில் ஏறியதும் மூதாட்டிக்கு இலவச டிக்கெட்டை கிழித்து கொடுத்தார். ஆனால் ஓசி டிக்கெட் வேண்டாம், காசை வாங்கிக்கொள் என கூறி மூதாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் அதிமுகவினர் வயதான மூதாட்டியை அரசு பேருந்தில் டிக்கெட் கேட்டு தகராறு செய்ய
சொல்லி வீடியோ எடுத்ததாகவும், அந்த மூதாட்டியும் அதிமுகவை சேர்ந்தவர்தான் எனவும் திமுகவினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதிமுக நிகழ்ச்சிகளில் அந்த மூதாட்டி பங்கேற்று இருந்த புகைப்படங்களையும் திமுகவினர் போலீசாரிடம் அளித்தனர்.
அரசியல் ரீதியாக நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக இப்படி செய்திருப்பதாக திமுகவினர் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக மதுக்கரை நகர திமுக செயலாளரான ராமு, மதுக்கரை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், அதிமுகவை சேர்ந்த பிரித்விராஜ், மதிவாணன், விஜய் ஆனந்த், மூதாட்டி துளிசியம்மாள் ஆகிய 4 பேர் மீதும் பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், அமைதியை சீர்குலைத்தல், வதந்தி பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் மதுக்கரை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால் அரசுப் பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய மாட்டேன் எனக் கூறிய மூதாட்டி மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக வெளியான தகவலில் உண்மையில்லை. அதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என கோவை மாவட்ட எஸ்பி பத்ரிநாரயணன் தெரிவித்துள்ளார். மூதாட்டியை தூண்டிவிட்டு வீடியோ பதிவு செய்த அதிமுகவை சேர்ந்த பிரித்விராஜ், மதிவாணன், விஜய் ஆனந்த் ஆகிய 3 பேர் மீது மட்டுமே மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக எஸ்பி பத்ரிநாரயணன் தகவல் தெரிவித்துள்ளார்.