‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை வெளியிட தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
’தி கேரளா ஸ்டோரி’ என்ற திரைப்படம் நாளை மறுநாள் நாடு முழுவதும் வெளியாக உள்ள நிலையில், இத்திரைப்படத்தை கேரளாவில் வெளியிடக்கூடாது என்றும், திரையிடுவதற்கு அரசு தடை விதிக்க வலியுறுத்தியும் பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் போராடி வருகின்றன. மேலும் இப்படத்தை கேரளாவில் திரையிட அனுமதி வழங்கக்கூடாது என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில், ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை வெளியிட தடை செய்யக் கோரி, வழக்கறிஞர் விருந்தா குரோவர் மற்றும் நிஜாம் பாஷா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், ‘தி கேரளா ஸ்டோரி திரைப்பட டிரெய்லர் காட்சிகளில் குறிப்பிட்ட மதத்துக்கு எதிரான வெறுப்பு பேச்சு, பிரச்சாரங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே இந்தப் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்’ என கூறியிருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் மற்றும் நீதிபதி பிஎஸ் நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று நடைபெற்றது. அப்போது வழக்கறிஞர் நிஜாம் பாஷா ஆஜராகி வாதிடுகையில், “கேரளா ஸ்டோரி படத்தில் மதத்துக்கு எதிரான வகையில் மோசமான வெறுப்பு பேச்சுகள் இடம்பெற்றுள்ளன. இது, முற்றிலும் குறிப்பிட்ட மதத்துக்கு எதிரான ஆடியோ-வீடியோ பிரச்சாரமாகவே பார்க்கப்படுகிறது. அந்தப் படத்தின் டிரெயிலர் காட்சிகளை 1.6 கோடிக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ள நிலையில், மத பிரச்னையை தூண்டும் வகையில் அமைந்துள்ள தி கேரளா ஸ்டோரி படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவிருப்பதால் அதற்கு உடனடியாக தடைவிதிக்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து, கேரள உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே இதே போன்ற ஒரு வழக்கு விசாரணையில் உள்ளதைக் குறிப்பிட்ட தலைமை நீதிபதி, இந்தப் படத்துக்கு மத்திய தணிக்கை வாரியம் உரிய அனுமதியையும், சான்றிதழையும் வழங்கியுள்ளது. இந்த மனுவை தற்போது விசாரணைக்கு ஏற்றுக்கொண்டால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். அனைவரும் நேரடியாக உச்ச நீதிமன்றத்தை நாடத் தொடங்கி விடுவார்கள். எனவே படத்துக்கு தடை கோரும் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆளும் சிபிஐ(எம்)ன் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகியவை , மதவெறியை உருவாக்கவும், மாநிலத்தை மோசமாக சித்தரிக்கவும் பொய்ப் பிரச்சாரத்தை படக்குழுவினர் மேற்கொள்வதாகக் கூறி, திரைப்படத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
- பி.ஜேம்ஸ் லிசா