நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அறிவிக்கப்பட்ட பல்வேறு மாற்றங்கள், போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்று வந்தாலும், இந்த தொடரின் சர்ச்சைக்குறிய விஷயமாக மாறியுள்ளது ”ஸ்லோ ஓவர் ரேட்”.
அதென்ன ஸ்லோ ஓவர் ரேட்?
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஒவ்வொரு நாளும் போட்டியின் முடிவின்போதும், ’இன்னைக்கு நம்ம அக்கவுண்டில் கை வைத்து விடுவார்களா?’ என்ற எண்ணத்திலேயே சிந்திக்க வைக்கின்ற அளவுக்கு இந்த விதிமுறையால் மாட்டிக்கொள்கின்றனர் டீம் கேப்டன்கள். அதாவது டி20 கிரிக்கெட் போட்டிகளின் ஒரு இன்னிங்ஸில் பந்துவீசப்படும் நேரம் என்பது ஐசிசி மற்றும் பிசிசிஐ விதிமுறைகளின் படி 90 நிமிடங்களாகும். இதில் ஸ்ட்ரேட்டேஜிக் டைம் அவுட் 2.30 நிமிடங்கள் என ஒரு இன்னிங்ஸுக்கு 2 முறையாக 5 நிமிடங்கள் அடங்கும். இந்த 90 நிமிடங்களில், வீரர்களின் காயம், டிஆர்எஸ், நடுவர்களின் முடிவு உள்ளிட்டவை அடங்காது.
கொடுக்கப்பட்டிருக்கும் 90 நிமிடங்களில் 20 ஓவர்களை பவுலிங் டீம் வீசியாக வேண்டும். மாறாக நேரம் தாண்டி தாமதப்படுத்தப்படும் ஒவ்வொரு ஓவர்களும் போட்டியின் விதிமுறைகளை மீறுவதாகவே கணக்கிடப்படும். ஆம், ஒவ்வொரு முறை ஒரு இன்னிங்ஸில் 90 நிமிடங்கள் தாண்டி பந்துவீசப்படும் போதும், அதற்கு தண்டனையாக 30 அடி உள்வட்டத்திற்கு வெளியே நிற்கும் ஃபீல்டர்களில் ஒருவருக்கான அனுமதி பறிக்கப்படும். அதாவது கடைசி ஓவரின் போது 30 யார்ட் வட்டத்திற்கு வெளியே 5 ஃபீல்டர்கள் நிற்பர். ஆனால் ’ஸ்லோ ஓவர் ரேட்’ தண்டனையாக 5 ஃபீல்டர்களில் 4 பேர் மட்டுமே 30 யார்ட் வட்டத்திற்கு வெளியே நிறுத்தி வைக்கப்படுவார். இதனால் கடைசி ஓவரை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன் இன்னும் சுலபமாக பவுண்டரிகளை விளாச முடியும். எனவே முதல்முறை இந்த தவறை செய்யும் அணியின் கேப்டனுக்கு ஐபிஎல் விதிப்படி, ஒரு போட்டியின் சம்பளத்தில் இருந்து ரூபாய் 12 லட்சம் அபராதமாக விதிக்கப்படும்.
அதே தவறை இரண்டாவது முறை செய்ய நேர்ந்தால் ரூபாய் 24 லட்சம் அபராதம் விதிக்கப்படும், மேலும் அந்த அணியில் உள்ள இம்பாக்ட் பிளேயர் உட்பட 12 வீரர்களுக்கும் ரூபாய் 6 லட்சம் அல்லது 25 சதவிகித சம்பள பிடித்தம் செய்யப்படும். இரண்டாவது முறை விதிமீறலுக்கு பின்னரும், மூன்றாவது முறையாக அதே தவறை அணியின் கேப்டன் செய்ய நேர்ந்தால், அணியின் கேப்டனுக்கு ரூபாய் 30 லட்சம் அபராதம் மற்றும் ஒரு போட்டியில் விளையாட தடையும், அந்த அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் ரூபாய் 12 லட்சம் அல்லது 50 சதவிகித சம்பள பிடித்தமும் செய்யப்படும்.
இவை அனைத்தும் இந்த ஐபிஎல் தொடரின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடந்து முடிந்திருக்கும் நிலையில், போட்டியின் போது ஏதோ ஒரு இடத்தில் எதிர்பாராத விதமாக மீறப்படும் ’ஸ்லோ ஓவர் ரேட்’ விதிமீறல், அணியின் கேப்டன், வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரின் மத்தியிலும் பேசுபொருளானது. இவ்வாறாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் முழுவதுமாக ’ஸ்லோ ஓவர் ரேட்’ விதிமீறலில் சிக்கிக்கொண்டு, அபராதம் செலுத்திய கேப்டன்கள் யார் யார் என்று தெரியுமா?
முதலாவதாக இந்த தொடரின் 15 ஆவது போட்டியான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் ’ஸ்லோ ஓவர் ரேட்’ விதிமுறை மீறியதாக பெங்களூர் அணி சிக்கியது. இதனால் அந்த அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளசிக்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதித்தது ஐபிஎல் நிர்வாகம். அடுத்ததாக 17 ஆவது போட்டியான ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.
அதற்கு அடுத்தபடியாக நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது, குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ரூ.12 லட்சமும், 22வது போட்டியான மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது கேப்டனாக செயல்பட்ட சூர்யகுமார் யாதவுக்கு ரூ.12 லட்சமும் அபராதமாக விதிக்கப்பட்டது.
26வது போட்டியான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது லக்னோ கேப்டன் கே.எல்.ராகுலுக்கும், 34வது போட்டியான சன்ரைஸர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது கேப்டன் டேவிட் வார்னருக்கும், 53வது போட்டியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது கேப்டன் நிதிஷ் ரானாவுக்கும் தலா ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.
இவ்வாறு ’ஸ்லோ ஓவர் ரேட்’ விதிமீறலில் குறிப்பிட்ட சில அணிகளும் தலா ஒரு முறை அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மட்டும் இரண்டாவது முறையாக அதே தவறை செய்ய நேர்ந்தது. இதனால் இரு அணிகளும் தலா ரூ.24 லட்சம் அபராதமாக செலுத்தியதோடு, அணியில் உள்ள இம்பாக்ட் பிளேயர் முதற்கொண்டு அனைவரும் தலா 6 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக பரபரப்பான தருணத்தில் அணியின் கேப்டன் சிந்திப்பது போல பந்துவீச்சாளர்கள் செயல்படாமல், கவனம் சிதறி எக்ஸ்ட்ராஸ்களை வாரி இறைப்பது தான் ’ஸ்லோ ஓவர் ரேட்’ விதிமீறலுக்கு காரணமாக அமைகிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இதுபோன்று அபராதம் விதிக்கப்படும் என விதிமுறை இருந்தும் கூட, சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது, சென்னை அணி அதிக எக்ஸ்ட்ராஸ் பந்துகளை போட்டதால் கடுப்பான மகேந்திர சிங் தோனி, பந்துவீச்சாளர்களை கண்டித்திருந்தார்.
மகேந்திர சிங் தோனியின் கண்டிப்பிற்கு பிறகு தான் இதுகுறித்த விழிப்புனர்வு மற்ற அணி வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் சென்றிருக்கக்கூடும். இருப்பினும் நடப்பாண்டில் இது ஒரு அதிருப்தியை ஏற்படுத்தியதோடு ஐபிஎல் வீரர்கள், ரசிகர்கள் என அனைவரின் மத்தியிலும் அதிக கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுபோன்ற விதிமுறைகளை பின்பற்றி ஒரு போட்டியை நடத்தும்போது மட்டுமே, அந்த குறிப்பிட்ட விளையாட்டிற்கான மரியாதை கூடும் எனவும் பலர் தெரிவித்து வருகின்றனர்.
– நாகராஜன், நியூஸ் 7 தமிழ் ஸ்போர்ட்ஸ்.