குஜராத் என்பதற்காக நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு மாற்றாக மனுஸ்மிரிதியை எல்லாம் வைத்து விட்டார்களா என்ன? ” எம்பி கனிமொழி சோமு தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தைச் சார்ந்த 17வயது சிறுமி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டு 7மாதம் கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் அவரது பெற்றோர், அவருடைய கருவைக் கலைக்க அனுமதிகோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தற்போது சிறுமி 7 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் ஆகஸ்ட் 16ஆம் தேதி குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால் வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை தரப்பில் தெரிவிக்க்ப்பட்டது. இந்த வழக்கு குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி சமீர் தவே அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி சமீர் தவே, “நாம் தற்போது 21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வீட்டில் உள்ள உங்கள் அம்மா அல்லது பாட்டியிடம் கேட்டுப் பாருங்கள். அந்த காலத்தில் எல்லாம் திருமணம் செய்ய அதிகபட்ச வயதே 14-15 வயதுதான்.
அப்படி திருமணம் நடைபெறும் பெண்களுக்கு 17 வயதிற்கு முன்பே குழந்தை பிறந்துவிடும். ஆண்களுக்கு முன்பே பெண்கள் முதிர்ச்சியடைகிறார்கள். இதனால் இது பெரிய விசயம் ஒன்றும் இல்லை. மனுஸ்மிருதியில் இதைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். இதை ஒருமுறை படியுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திமுகவின் மாநிலங்களவையின் உறுப்பினர் கனிமொழி என்விஎன் சோமு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..
“ 14,15 வயது பெண் குழந்தைகளுக்கு திருமணம், குழந்தை பேறெல்லாம் பெரிய விஷயமே இல்லை. நம் முன்னோர்கள் 14,15 வயதில் திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொள்ளவில்லையா என்றதோடு 21ம் நூற்றாண்டில் இதெல்லாம் சாதாரணம் என்று பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கருவுற்ற பெண்ணின் தந்தை கருக்கலைப்பு செய்ய அனுமதி கோரி தொடுத்த வழக்கில் குஜராத் உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது.
கூடவே மனுஸ்மிரிதியை படிக்க சொல்லி அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது. நான் மனுஸ்மிரிதியை அல்ல, இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகரித்த மருத்துவ பாடத்திட்டத்தை படித்து மகப்பேறு மருத்துவர் ஆன முறையில் சொல்கிறேன், 14, 15 வயது பதின்பருவ பெண்ணுடல் ஒரு குழந்தையை தாங்கும் திறன் படைத்ததல்ல. முன்பு கல்வி அறிவு, அறிவியல் அறிவின்றி நடைபெற்ற குழந்தை திருமணங்களால் குழந்தையே குழந்தையை சுமந்து இறந்த பெண்களின் எண்ணிக்கைக்கு தரவுகள் கூட இங்கே முறையாக இல்லை.
அப்படி சிறு வயதில் குழந்தை பேறு பெற்ற பெண்கள் உடல் ரீதியாக அடைந்த பாதிப்புகள் ஏராளம். அதையெல்லாம் அவர்கள் சொல்லவில்லை, சொல்லவேண்டும் என்று கூட தெரியாத மனுஸ்மிரிதி காலம். ஆனால் அந்த மனுஸ்மிரிதிக்கு மாற்றாக பல்வேறு அரசியல் முன்னெடுப்புகள், போராட்டங்கள், பகுத்தறிவு பார்வை கொண்டு எழுதப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம், திருமண வயது 18 என்று தானே சொல்கிறது? குஜராத் என்பதற்காக நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு மாற்றாக மனுஸ்மிரிதியை எல்லாம் வைத்து விட்டார்களா என்ன?” என எம்பி கனிமொழி என்விஎன் சோமு தெரிவித்துள்ளார்.