கலிபோர்னியாவில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் குற்றவாளியாக கருதப்படும் நபர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.
ஆங்கில புத்தாண்டு ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுவது போல சீனாவில் சூரிய-சந்திர காலண்டரின் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 22ம் தேதி சீனப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்த புத்தாண்டிற்கு சீனர்கள் அனைவரும் ஒன்றுகூடி கலைநிகழ்ச்சிகளை கண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த ஆண்டின் சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் கோலாகலமாக நடைபெற்றது. சீனப் புத்தாண்டை முன்னிட்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மாண்டரி பூங்காவில் மக்கள் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்தனர். இந்த கொண்டாட்டங்கள் இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறும். கலிபோர்னியா மாகாணத்திலேயே நடைபெறும் மிகப்பெரிய கொண்டாட்டங்கள் இதுவேயாகும்.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் மக்கள் கேளிக்கைகள் , ஷாப்பிங் மற்றும் சீன உணவுகளை வாங்கி மகிழ்ச்சியை கொண்டாடிக் கொண்டிருக்கும்போது திடீரென மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிசூட்டில் கிட்டத்தட்ட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் கலிபோர்னியாவில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் குற்றவாளியாக கருதப்படும் நபர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக ஹூ கேன் டிரான் என்ற 72 வயது நபர் அடையாளம் காணப்பட்ட நிலையில் வேனில் பதுங்கி இருந்த அவனை சுற்றிவளைத்து பிடிக்க முயன்றபோது தன்னைத்தானே சுட்டுக்கொண்டு அவன் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.