ஜம்மு-காஷ்மீரில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 55 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வைஷ்ணோ தேவி கோவிலுக்கு, அமிர்தசரஸில் இருந்து பக்தர்களை ஏற்றிக் கொண்டு, பேருந்து ஒன்று ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில், ஜஜ்ஜார் கோட்லி பகுதிக்கு அருகே, ரியாசி மாவட்டத்தில் உள்ள கத்ரா அருகே, வந்து கொண்டிருந்தது. அப்போது ஜம்மு-ஸ்ரீநகர் சாலையில் உள்ள மேம்பாலத்தில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பேருந்தில் மொத்தம் 75 பேர் சென்று கொண்டிருந்த நிலையில் இந்த கோர விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 55 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 3 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து பேசிய ஜம்முவின் மூத்த காவல் கண்காணிப்பாளர் சந்தன் கோஹ்லி, மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காவல்துறை மற்றும் மத்தியப் படைகளைத் தவிர, உள்ளூர் மக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் அனைவரையும் மீட்டு ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். அவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் இயக்குநர் ஜெனரல் தில்பாக் சிங் கூறுகையில், விபத்து குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், பேருந்தை ஓட்டுநர் மிக வேகமாக ஓட்டி வந்தது தெரிய வந்துள்ளது. மேலும் பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததும் விபத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆனாலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்டவர்கள் அனைவரும் ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.
இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரில் பேருந்து விபத்தில் உயிழந்தவர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஜம்முவில் பேருந்து விபத்தில் பல யாத்ரீகர்கள் உயிரிழந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிராத்திப்பதாக தெரிவித்துள்ளார்.
விபத்தில் பேருந்துக்கு அடியில் இன்னும் வேறு யாரேனும் சிக்கி உள்ளனரா என்பதை கண்டறிய கிரேன் ஒன்றும் வரவழைக்கப்பட்டு, மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
जम्मू में हुई बस दुर्घटना में कई तीर्थयात्रियों की मृत्यु अत्यंत दुर्भाग्यपूर्ण है। अपने प्रियजनों को खोने वाले परिवारों के प्रति मेरी गहरी शोक-संवेदनाएं। मैं घायल हुए लोगों के शीघ्र स्वस्थ होने की कामना करती हूं।
— President of India (@rashtrapatibhvn) May 30, 2023
- பி.ஜேம்ஸ் லிசா