நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மத்திய பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்காகவும், பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என தெரிவித்துள்ளார். பல மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், வேலைவாய்ப்பை அதிகரிக்க எந்த முன்னெடுப்பும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதேபோல், அடுத்தாண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக, திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். இது மக்களுக்கு எதிரான பட்ஜெட் எனவும், முழுவதும் சந்தர்ப்பவாத பட்ஜெட் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் வரி விதிப்பு அதிகம் உள்ளதாக, காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி விமர்சித்துள்ளார். வளர்ச்சி திட்டங்கள் மற்றும் மானியங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அளித்துள்ள பேட்டியில், மத்திய பட்ஜெட் நம்பிக்கைக்கு பதிலாக விரக்தி அளிப்பதாக உள்ளது என கூறியுள்ளார். முந்தைய பட்ஜெட்களில் மக்களுக்கான எந்த அறிவிப்புகளையும் வெளியிடாத பாஜக அரசு, தற்போது மட்டும் எப்படி நல்ல அறிவிப்புகளை வெளியிடும் என கேள்வி எழுப்பியுள்ளார்.