கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியது ஏன் என்று எடியூரப்பா விளக்கம் அளித்துள்ளார்.
கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக எடியூரப்பா இன்று அறிவித்தார். பிற்பகலில் மாநில ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டிடம் ராஜினாமா கடிதத்தை வழங்க இருப்பதாக கூறியிருந்தார். அதன்படி அவர் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார். அதை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், எதற்காக பதவி விலகினேன் என்று விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: முதலமைச்சராக பதவி வகிக்க வாய்ப்பளித்த பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி நட்டா ஆகியோருக்கு நன்றி.
2 ஆண்டுகளில் ராஜினாமா செய்வேன் என்று கூறியிருந்தபடி இப்போது ராஜினாமா செய்துள்ளேன். பதவியில் இருந்து விலகும்படி எனக்கு எந்த நெருக்கடியும் இல்லை. என் விருப்பப்படியே ராஜினாமா செய்துள்ளேன்’ என்றார்.
75 வயதை தாண்டிய தலைவர்களுக்கு பா.ஜனதாவில் கட்டாய ஓய்வு அளிக்கப்படுகிறது. ஆனால், எடியூரப்பாவுக்கு விலக்கு அளித்து முதலமைச்சர் பதவியை பாஜக வழங்கியது. அப்போது, 2 ஆண்டுகள் முடிந்ததும் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று பாஜக மேலிடம் கூறியிருந்தது. அதன்படி அவர் பதவி விலகியுள்ளார்.








