தொழிற்சாலை அபகரிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டுமென ஜெயக்குமார் தரப்பு வாதம் முன்வைத்துள்ளது.
சென்னை திருவான்மியூரை சேர்ந்த மகேஷ் என்பவர் அளித்த தொழிற்சாலை அபகரிப்பு புகாரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கடந்த 25ம் தேதி காவல் துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் இன்று ஆலந்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஜெயக்குமாரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆஜர்படுத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நீதிமன்றத்தில் ஜெயக்குமார் எடுத்து வைத்த வாதத்தில், 1991ம் ஆண்டு முதல் பல்வேறு பதவிகளில் இருந்து வருவதாகவும், தன் மீது ஒரு வழக்கு கூட கிடையாது எனத் தெரிவித்தார். அண்ணன், தம்பிக்கு இடையே உள்ள ஒரு சொத்துப் பிரச்னையில் தன்னை எப்படி சேர்க்க முடியும். அதுபோலவே, இது சிவில் வழக்கு. அதில் எப்படி நில அபகரிப்பு வரும் எனக் கூறினார்.
அதுபோலவே ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கு முழுவதும் அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையே உள்ள ஒரு சொத்து பிரச்னை. இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எந்த வித தொடர்பும் இல்லை. எனவே, இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும் என வாதிட்டார்.
வாதங்களைக் கேட்டுக்கொண்ட நீதிபதி வைஷ்ணவி, ஜெயக்குமரை வரும் 11 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து, புழல் சிறையில் அடைக்க ஜெயக்குமாரை காவல்துறையினர் அழைத்துச்சென்றனர்.