8ஆம் வகுப்பு மாணவியை தம்பிக்குத் திருமணம் செய்து வைத்த அண்ணனை போலீஸார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம், காஞ்சிக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி. சலூன் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவர், ஈரோடு பகுதியில் அரசுப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது மாணவியுடன் பழகியுள்ளார். இதையடுத்து, சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடந்த மாதம் 3ஆம் தேதி இரவு பைக்கில்
கடத்திச் சென்று, கொளப்பலூரில் உள்ள கோயிலில் வைத்து சிறுமியைத் திருமணம் செய்துள்ளார். இதற்கிடையில், சிறுமியைக் காணவில்லை என பெற்றோர் காஞ்சிக்கோவில் போலீஸில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின்பேரில் போலீஸார் சிறுமியை தீவிரமாகத் தேடி வந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், கடந்த மாதம் 5ஆம் தேதி பெத்தாம்பாளையம் நால்ரோடு அருகே போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக சிறுமியுடன் வந்த கார்த்தி, காஞ்சிக்கோவில் மேற்கு ரத வீதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் ஆகியோரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமியை கார்த்தி கடத்திச்
சென்று திருமணம் செய்ததும், அவருக்கு உடந்தையாக கோபாலகிருஷ்ணனும் இருந்ததும் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து இருவர் மீதும் குழந்தைத் திருமணம் தடை சட்டம், கடத்தல், போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீஸார் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து சிறுமி அளித்த வாக்குமூலத்தில் திருமணத்திற்கு கார்த்தியின்
அண்ணன் முரளியும் உடந்தையாக இருந்ததாகத் தெரிவித்துள்ளார். இதன்பேரில்,
தலைமறைவாக இருந்த முரளியை காஞ்சிக்கோவில் போலீஸார் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.