ஜாதி சரி என்று கூறி ஒரு குழந்தையை வளர்ப்பதும் வன்முறைதான் என்று எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் “குழந்தைகளுக்கு எதிரான
வன்முறைகள், குழந்தை திருமணங்களை தடுத்தல், இளைஞர் பரிந்துரைஞர்களை
ஊக்குவித்தல்” என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத் துறை, தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைகழகத்தின் குற்றவியல் துறை, தோழமை அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளுக்கான அமைப்பு உள்ளிட்டோர் இணைந்து நடத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில், திமுக மகளிர் அணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கருத்தரங்கை தொடங்கிவைத்து மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.
அப்போது, மேடையில் பேசிய கனிமொழி, இந்த கருத்தரங்க முன்னெடுப்பு சிறப்பானது. சமூக நீதி என்று பேசும் போது ஆண், பெண் சமமாகப் பார்க்கப்பட வேண்டும். ஜாதி மதம் என பிறப்பால் உருவாகும் பாகுபாடுகள் இருக்க கூடாது. சுய மரியாதையோடு கூடிய சமூகத்தை இயக்க வேண்டும் என்பது தான் சமூக நீதி. இதில், குழந்தைகளை சேர்ப்பதில்லை. வயதின் அடிப்படையில் இந்த பாகுபாடு ஏற்படுகிறது. ஒருவர் நமக்கு பிறகு பிறப்பதால் உரிமை மறுக்கப்படுதை கவனத்தில் கொள்வதில்லை.
முன்பெல்லாம், அம்மா அப்பா சவுக்கால், பெல்ட்டால் அடிப்பார்கள் என்று சர்வ
சாதாரணமாக சொல்லும் காலம் இருந்தது. ஆசிரியர்கள் அடிக்கவில்லை என்றால் சரியான ஆசிரியர் இல்லை என்ற சொன்ன காலக்கட்டம் இருந்தது. இப்போது அது மாறியுள்ளது. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு அதிகம் செல்போன் பயன்படுத்தப்படுவது தான் காரணம் என தொழில்நுட்ப வளர்ச்சி மீது பழி போடுகிறோம். இப்போது தான் இது போன்ற வன்முறை குறித்து பேச ஆரம்பித்து இருக்கிறோம். ஒரு அறையில் உள்ள 10 பேரில் குறைந்தது 5 பேராவது ஏதேனும் ஒரு வன்முறைக்கு ஆளாகிறார்கள். அது அவர்கள் வாழ்நாள் முழுதும் உள்ளது.
சட்டங்கள் கடுமையாக உள்ளபோது யாரும் புகார் அளிக்கவே முன்வர மாட்டார்கள்.
சட்டங்கள் இருப்பதை நிறைவேற்றுகிறோமா என்று எண்ணி பார்க்க வேண்டும் .
குழந்தைகளுக்கான விருப்பு வெறுப்புகளுக்கு முக்கியத்துவம் கிடையாது. ஜாதி சரி என்று சொல்லி ஒரு குழந்தையை வளர்ப்பதும் ஒரு வன்முறை தான். குழந்தைக்கு சிந்திப்பதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும்.
50 வருடங்களுக்கு முன் இருந்த உரிமைகள், சமூக நீதியை இன்றைக்கு ஏற்றவாறு
கட்டமைக்க வேண்டும். கல்லூரி மாணவர்கள் குழந்தைகளை அணுகுவது சுலபம். நீங்கள் அவர்களிடம் இருந்து வெகு தூரத்தில் இல்லை. அவர்களை புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் மற்றவர்களைவிட அதிகம். நீங்கள் இதுகுறித்து ஒரு குழு அமைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த முயல வேண்டும். குழந்தைகளை அக்கறையோடு, கவனத்தோடு பார்க்கும்போது உங்களுக்குத் தெரிந்த
குழந்தைகளிடம் மாற்றத்தை உணர்ந்தால் என்ன பிரச்சனை என்று பேசுங்கள்.
அவர்கள் நம்பி பேசும் ஆள் வேண்டும். இதை குறித்து விழிப்புணர்வு வேண்டும்.
அதிகம் பேசப்படாத விஷயமாக உள்ளது குழந்தைகள் உரிமை. சில குழந்தைகள் திருமணம் ஆகிவிட்டதால் பள்ளிக்கு வரவில்லை. இதுகுறித்து அந்த
அதிகாரிகளிடம் கேட்டால் அந்த குழந்தைகள் திருமணம் ஆகி வேறு இடத்திற்கு
சென்றதால் எங்கள் கட்டுப்பாட்டிற்குள் வராது என்றனர். இதற்கு துறைகளுக்கு
இடையில் சேர்ந்து செயல்படும் தன்மை இல்லாதது தான் காரணம். அவர்கள் புகார் அளித்திருந்தால் அதை தடுத்திருக்கலாம். குழந்தைகள் உரிமை குறித்து பேசப்பட வேண்டும். குழந்தைகளும் சுயமரியாதையோடு வாழ வேண்டிய உரிமை உள்ளவர்கள் என்றார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர்
ரத்னகுமார், உதவிப் பேராசிரியர் அனந்த ராமகிருஷ்ணன், தோழமை அமைப்பின் இயக்குனர் தேவநேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இந்த கருத்தரங்கில், “குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், குழந்தைத் திருமணங்களை தடுத்தல்” குறித்து பல்வேறு அமர்வுகளில் ஆலோசனை நடைபெற்றது.