திருச்சி குணசீலம் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ள ஆய்வறிக்கை வழங்க ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்ட பெண் தொல்லியல் துறை அதிகாரி லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.
திருச்சி மாவட்டம் முசிறி வட்டத்தில் பிரசித்திபெற்ற குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலைச் சேர்ந்த பிச்சுமணி ஐயங்கார், பரம்பரை நிர்வாகியாக இருந்து வருகிறார். இந்த கோவிலுக்கு திருப்பணி வேலைகள் நடைபெற்று 12 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால், தற்போது உபயதாரர்கள் மூலமாக திருப்பணி நடத்த திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக முறையான அனுமதியை இந்து சமய அறநிலையத்துறையிடமிருந்தும் பெற்றுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் ஆய்வறிக்கை பெறவேண்டிய நிலையில் இருந்துள்ளது. அதன்படி நிபுணர் குழுவினர் கடந்த ஜூன் 2ஆம் தேதி இக்கோவிலில் ஆய்வு செய்துள்ளனர். அதற்குப் பிறகும் ஆய்வறிக்கை கோவில் நிர்வாகத்திற்கு கிடைக்கப்பெறாதால் நிர்வாகத்தினர் நிபுணர் குழுவினரை தொடர்பு கொண்டுள்ளனர்.
இதனையடுத்து நிபுணர் குழு உறுப்பினரும் தொல்லியல் துறை வல்லுநருமான மூர்த்தீஸ்வரி என்பவர், கடந்த மாதம் மீண்டும் திருக்கோவிலுக்கு வந்து அறங்காவலரை சந்தித்து 10 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால்தான் ஆய்வறிக்கை வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளார். பிச்சுமணி பத்து லட்சம் ரூபாய் அதிகமாக உள்ளதாகவும் இதனை உபயதாரர்களிடம் கேட்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். அதற்கு மூர்த்தீஸ்வரி, ஐந்து லட்சம் ரூபாயாவது கொடுத்தால் தான் ஆய்வறிக்கை வழங்க முடியும் என்றும் முன்பணமாக ஒரு லட்ச ரூபாய் கொடுக்குமாறும் பிச்சுமணியிடம் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத பிச்சுமணி ஐயங்கார், திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை
டிஎஸ்பி மணிகண்டனிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை அளித்த ஆலோசனையின் பேரில், பிச்சுமணி மூர்த்தீஸ்வரியிடம் ஒரு லட்ச ரூபாய் முன்பணத்தை
கொடுக்கும் போது கையும் களவுமாக பிடிபட்டார். லஞ்ச ஒழிப்புத் துறையினரின் விசாரணையில், தமிழகத்தில் இது போன்ற பல கோயில்களுக்கு இந்த கமிட்டியினரால் ஆய்வறிக்கை வழங்கப்படாமல், கோயில்களின் திருப்பணி வேலைகள் நடைபெறாமல் நிலுவையில் உள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் மூர்த்தீஸ்வரியின் காரை சோதனை செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், கணக்கில் வராத ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை கைப்பற்றினர்.