கரூர் மாநகர காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சமடைந்த நிலையில், மனைவியிடம் நீண்டநேரமாக விசாரணை செய்வதாகக் கூறி காதலன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு காலனி பகுதியில் வசிப்பவர் அன்பரசன் (24). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டே, காலையில் வீடுவீடாக
நியூஸ் பேப்பர் போடும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது, மின்னாம்பள்ளி
கிராமத்தில் நர்மதா என்ற இளம் பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும்
வேறு, வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள். இந்த காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு
தெரியவந்ததை அடுத்து இருவரும் கடந்த சனிக்கிழமை வீட்டைவிட்டு வெளியேறி
ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் உள்ள ஆதி மாரியம்மன் கோவிலில் நண்பர்கள்
உதவியுடன் திருமணம் செய்து கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று பெண்ணின் உறவினர்களிடமிருந்து இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி இருவரும் கரூர் மாநகர காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அப்போது, தன் மனைவியை மட்டும் தனியாக அழைத்துச் சென்று விசாரிப்பதாக கூறியும், அன்பரசன் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் காவல்நிலையம் வாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர், போலீசார் சமரசம் செய்து இளம்பெண்ணிடம் சேர்த்து அமரவைத்தனர். இது தொடர்பாக போலீசார் இரு தரப்பு பெற்றோர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், கரூர் மாநகர காவல் நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.
-ம.பவித்ரா







