நெல்லையில் அமையவுள்ள பொருநை அருங்காட்சியக கட்டுமான பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த சட்டப் பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி நெல்லை மாநகரில் பொருநை நாகரிகத்தின் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கும் தாமிரபரணி ஆற்றின் கரையில் பல்வேறு பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அவர் அறிவித்திருந்தார். இந்த அருங்காட்சியகத்தில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளையில் நடத்தப்பட்ட அகழாய்வுகள் மூலம் கிடைத்த பொருட்கள் காட்சிப்படுத்தப்படும் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் நெல்லையில் அருங்காட்சியகம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யும் பணியில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பாளை கே.டி.சி. நகரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் 4 வழிச்சாலையில் ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்து அந்த இடத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருங்காட்சியகமாக மட்டுமல்லாமல் இதை சுற்றுலாத் தலமாக பயன்படுத்தும் வகையில் அமைய உள்ளது.
தமிழரின் அடையாளத்தை உலக மக்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் அமைய உள்ள இந்த அருங்காட்சியகத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று துவங்கிவைத்தார். மேலும் இந்த விழாவில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மற்றும் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த அருங்காட்சியகத்திற்கு 13 ஏக்கர் பரப்பளவில் இடம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தொல்லியல் துறை சார்பில் ரூ. 33 கோடி மதிப்பில் நவீன வசதிகளோடு பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது.







