நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறிப்பாக அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் வீடுகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுகிறது.

நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், இன்று மதியம் நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து வெடிகுண்டு கண்டறியும் குழுவினர் அருணாச்சலம், கோபி, வேல்முருகன், சௌந்தர்ராஜன், ரமேஷ் மற்றும் மோப்ப நாய் டயானா மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனை செய்தனர்.

சோதனை முடிவில் மின்னஞ்சலில் வந்த தகவல் பொய் என்பது தெரியவந்தது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.