ஈரோடு ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் மிரட்டல் விடுத்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் ஈரோடு ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், இன்னும் சற்று நேரத்தில் வெடிக்கப் போவதாகவும் மிரட்டல் விடுத்தார். உடனடியாக இதுகுறித்து ஈரோடு போலீசாருக்கும், ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : வடமாநில தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோ வெளியீடு – ஜார்கண்ட் இளைஞர் கைது
இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் ரயில் நிலையத்தில் மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். ரயில் நிலையத்தில் உள்ள கடைகள், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம், குப்பைத் தொட்டிகள் என அனைத்து பகுதியிலும், சல்லடை போட்டு சோதனை செய்தனர். ஒரு மணி நேர சோதனைக்கு பிறகு வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த செய்தியில் உண்மையில்லை என்பது தெரியவந்தது.
இதேபோல் ஈரோடு பேருந்து நிலையத்திலும் போலீசார் சோதனையிட்டனர். அங்கும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
– அனகா காளமேகன்







