பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி மற்றும் சுதந்திர தினத்தையொட்டி, மும்பையில் போலீசாரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் பேசிய மர்ம நபர் ஒருவர், நடிகர் அமிதாப் பச்சன் வீடு மற்றும் ரயில் நிலையங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறி போனை துண்டித்துவிட்டார்.
இதையடுத்து, அமிதாப் வீடு மற்றும் ரயில் நிலையங்களில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். ஆனால், எந்தவித வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து, தொலைபேசியில் வந்த தகவல் வெறும் வதந்தி என்பது தெரியவந்தது. இதனிடையே, தொலைபேசி மிரட்டல் விடுத்ததது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.








