பெட்ரோல் குண்டு வீச்சு மூலம் தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சியை சீர்குலைக்க முடியாது என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சியை சீர்குலைக்க முடியாது. பெட்ரோல் குண்டு தாக்குதல் தொடர்ந்து நீடித்தால், தொண்டர்களின் கோபத்துக்கு மாநில அரசு ஆளாக நேரிடும். தமிழகத்தில் பாஜக தொண்டர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. மதுரையில் நடந்த சம்பவம் எல்லோருக்கும் தெரியும். பிரச்சினைகள் குறித்து டிஜிபி யிடம் பேசியுள்ளோம். பெட்ரோல் குண்டு சம்பம் தொடர்பான பாதிப்புகளை ஆய்வு செய்ய பாஜக எம்எல்ஏக்கள் சார்பில் நான்கு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று தொண்டர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர் என்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழக டிஜிபி அறிக்கையை வரவேற்கிறோம். சட்டம் ஒழுங்கு சீர் குலைய கோவை மாநகர காவல்துறையே காரணம். காவல்துறை நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும். கோவை காவல்துறை அதிகாரிகள் மீது நான் புகார் கொடுக்க உள்ளேன். பாஜக தொண்டர்கள் மீது கை வைத்த யாரையும் விடமாட்டேன். இன்னும் இரண்டு ஆண்டில் திமுக ஆட்சியில் இருக்காது. நாளை பாஜக சார்பில் கண்டன போராட்டம் நடத்தப்படும். காவல்துறை ஏவல்துறையாகவே உள்ளது. பாஜக தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
தமிழக முதலமைச்சர் உரிய நடவடிக்கை மேற்கொள்வார் என எதிர்பார்க்கிறோம். காவல்துறை ஆரம்பத்தில் சுனக்கமாக இருந்தாலும் கூட, தற்போது சுதாரித்துக் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் அதிக அளவில் மேற்கொள்ள வேண்டும். 15 மாத காலமாக தமிழக உளவுத்துறை சரிவர செயல்படவில்லை. தடையை மீறி பாஜக சார்பில் கண்டன போராட்டம் நடைபெறும்.
பொதுமக்களை மிரட்டிய திமுக எம்எல்ஏ மீது முதமைச்சர் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை. எதையும் பார்த்துக் கொண்டு மத்திய அரசு வேடிக்கை பார்க்காது. கருத்து சொன்னால் வன்கொடுமை தடுப்பு சட்டம் போடுவது ஏற்றுக்கொள்ள முடியாது. பாஜக தொண்டர்களை கட்டுப்படுத்தி வைத்துள்ளோம். வன்முறையை பாஜக விரும்பவில்லை. முதலமைச்சர் விழித்துக்கொள்ள வேண்டும். பாஜகவிற்கும், திமுகவிற்கும் நடைபெறும் போரில் காவல்துறை உள்ளே வரக்கூடாது.