பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டதில்லை என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அரசின் 9 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகள் குறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
”2014-ம் ஆண்டுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில், இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறி உள்ளது. பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவை சேர்ந்தவர்கள் பெருமை அடைந்துள்ளார்கள். பெண்கள் பல்வேறு துறைகளின் தலைவர்களாக முன்னேறி உள்ளனர். உலக அளவில் முக்கிய தலைவராக பிரதமர் மோடி பார்க்கப்படுகிறார்.
கொரோனா காலக்கட்டத்தில் வளர்ந்த நாடுகளின் பார்வை இந்தியா மேல் இருந்தது. மேலும் இவ்வளவு மக்கள் தொகை கொண்ட நாட்டில் கொரோனா வைரஸை எவ்வாறு கட்டுப்படுத்த போகிறார்கள் என்ற கேள்வி எழும்பியது. இந்த அனைத்து சிக்கல்களையும் சமாளித்து கொரோனா பரவலை சிறப்பாக கையாண்டோம். ஆனால் குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடுகளால் கொரோனாவை சமாளிக்க முடியவில்லை.
தற்போது, விண்வெளித்துறையில் இந்தியா முன்னேறி வருகிறது. அதன் வளர்ச்சியை 2014-க்கு முன்னும், பின்னும் ஒப்பிட்டு பார்த்தால் தான் புரியும். பாஜக ஆட்சிக்கு முன் நாடு ஊழலுக்கு பெயர் போனதாக இருந்தது. மோடி வந்தபின் நாட்டையும், நாட்டு மக்களையும் பெருமையடைய செய்துள்ளார்.
இந்தியர்களை உலகம் அங்கீகரிக்கத் துவங்கியுள்ளது. மற்ற நாடுகளில் இந்தியர்களை பணியமர்த்த விரும்புகிறார்கள். உலக நாடுகளின் அதிபர்கள், மோடியின் அறிவுரையையும், வழிகாட்டுதலையும் எதிர்பார்க்கிறார்கள். இந்தியா மற்ற நாடுகளை வழிநடத்த விரும்புகிறார்கள். எங்கு என்ன தேவை என உணர்ந்து அங்கு வளர்ச்சியை கொண்டு வந்தவர் மோடி. அந்த வகையில் தான் நாடு முழுவதும் 74 விமான நிலையங்கள் திறக்கப்பட்டன.
2014-ம் ஆண்டுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் பயணிகளே இல்லாவிட்டாலும் சுயநலத்தோடு சொந்த நகரங்களுக்கு விமான நிலையம், கிராமங்களுக்கு ரயில் நிலையம் திறக்கப்பட்டது. பாஜக ஆட்சியில் அவ்வாறு இல்லை. பாஜக ஒருபோதும் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டதில்லை. பல கிராமங்களில் உள்ள பள்ளிகளில் கழிவறை இல்லாததால் பெற்றோர்கள், பெண் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாத சூழல் இருந்தது. அந்த நிலையும் தற்போது மாறியுள்ளது. நாடு முழுவதும் பெண்களுக்கு 12 கோடி கழிவறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.
உலகின் பழமை வாய்ந்த மொழியாக தமிழ் மொழி இருக்கிறது. தமிழர்களின் கலாச்சாரமான செங்கோல் நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் நிறுவப்பட்டு இருக்கிறது.”
இவ்வாறு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.