பீகார் தேர்தல் : முதற்கட்டமாக நாளை 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு..!

பீகாரில் முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்த மாதம்  6,11 ஆகிய தேதிகளில் என இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன் படி 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபையில் முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 14-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

7 கோடியே 42 லட்சம்  வாக்காளர்களை கொண்ட பீகாரில் 3 கோடியே 92 லட்சம் ஆண்கள் வாக்காளர்களும், 3 கோடியே 50 லட்சம் பெண் வாக்காளர்களும் உள்ளனர். வாக்க்ப்பதிவுக்காக சுமார்  90 ஆயிரத்து 712 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல்கட்ட தேர்தலுக்காக கடந்த மாதம் 10-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி 17-ந் தேதி நிறைவடந்தது. 18-ந் தேதி மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. மனுக்கள் வாபஸ் பெற 20-ந் தேதி கடைசி நாளாக இருந்தது. அதன் படி 121 தொகுதிகளில் மொத்தம் 1,314 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

முதற்கட்டமாக 121 தொகுதிகளிலும் நாளை (வியாழக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து நேற்று 6 மணியோடு பிரசாரங்கள் ஓய்ந்தன.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.