போகி பண்டிகையையொட்டி மக்கள் பழைய பொருட்களை தீயிட்டு எரித்தும், சிறுவர்கள் மேளம் அடித்தும் உற்சாகமாக கொண்டாடினர்.
தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
போகி பண்டிகை என்றால் நமது மனதில் உள்ள கெட்ட எண்ணங்கள், தீய குணங்கள் போன்றவற்றை முற்றிலுமாக நீக்கி, புதிய நல்ல எண்ணங்களை கொண்டு வர வேண்டும் என்பதற்காக இதை உணர்த்தும் வகையில்தான் வீடுகளில் உள்ள பழைய பொருட்களை எரித்து வருவதாக கூறப்படுகிறது.
அதன்படி தைதிருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு முதல் நாளை நாம் போகி பண்டிகையான கொண்டாடி வருகிறோம். போகி பண்டிகையன்று பழைய பொருட்களை எல்லாம் ஓரிடத்தில் குவித்து எரிப்பது வழக்கம்.
அந்த வகையில் போகி பண்டிகையான இன்று சென்னையில் மயிலாப்பூர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள கிராம மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள பழைய துணிகள், போர்வைகள் மற்றும் பாய்கள் என பழையபொருட்கள் அனைத்தையும் தங்கள் வீடுகளுக்கு முன்பாக நெருப்பிலிட்டு கொளுத்தினர். அதனைத் தொடர்ந்து சிறுவர்கள் கொழுந்துவிட்டு எரியும் தீயைச் சுற்றி நின்று மேளம் அடித்து போகிப் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.