அணியில் உள்ள 7 பேருக்கு திடீரென கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, புதிய அணியை இங்கிலாந்து கிரிக்கெட் அணி அவசரம் அவசரமாக உருவாக்கியுள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி நாளை தொடங்க இருக்கிறது.
இந்நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, 3 வீரர்கள் உட்பட அணியை சேர்ந்த ஏழு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதனால் வீரர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு உள்ளனர். எந்தெந்த வீரர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
இதற்கிடையே, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டித் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதற்காக, இயான் மோர்கலுக்குப் பதிலாக பென் ஸ்டோக்ஸ் தலைமையில் புதிய அணி, அவசரம் அவசரமாக உருவாக்கப்பட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடரில் அடைந்த காயம் காரணமாக, கடந்த 2 மாதங்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய அணியில், 9 பேர் அறிமுக வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, பாகிஸ்தான் அணிக்கு எதிராக கேப்டனாக செயல்படுவது தனக்கு கிடைத்த பெரிய கவுரம் எனவும் கேப்டன் இயான் மோர்கலின் இடத்தை நிரப்புவது கடினமான காரியம்தான் என்று பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.







