பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் நாட்டு தேசிய கொடியை பதித்து பயிற்சி மேற்கொள்வதற்கு பங்களாதேஷ் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
டி-20 உலகக் கோப்பைத் தொடரில், அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியுடன் தோல்வி யைத் தழுவிய பாகிஸ்தான் அணி, அங்கிருந்து பங்களாதேஷ் சென்றுள்ளது. அந்த அணியுடன் 3 டி-20 மற்றும் 2 டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கிறது. அங்கு பாகிஸ்தான் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பயிற்சி நடக்கும் இடத்தில் பாகிஸ்தான் நாட்டுக் கொடியை பதித்து, வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் சக்லைன் முஷ்டாக், டி-20 உலகக் கோப்பை தொடரின்போது பாகிஸ்தான் கொடியை பதித்து பயிற்சியை தொடங்கினார். அதே நடைமுறையை பங்களாதேஷிலும் தொடர்கிறார். இதற்கு பங்களாதேஷ் கிரிக்கெட் ரசிகர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைதளங்களில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். ‘பாகிஸ்தான் வீரர்கள் உடனடியாக வெளியேற வேண்டும். பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் இந்த தொடரை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்’ என்று சிலர் ஆவேசமாகக் கூறியுள்ளனர்.
சிலர், ’பல்வேறு நாடுகள் பங்களாதேஷில் கிரிக்கெட் விளையாடி இருக்கின்றன. ஆனால், எந்த அணியும் இதுபோன்று தங்கள் நாட்டுக் கொடியை பதித்து பயிற்சியில் ஈடுபட்டதில்லை. ஆனால், பாகிஸ்தான் ஏன் இப்படி செய்கிறது? இதன் மூலம் அந்த நாடு சொல்ல வருவது என்ன?’ என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.