மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கு நிலுவைத் தொகையை செலுத்தாத காரணத்தால், தமிழ்நாடு உள்பட 13 மாநிலங்கள், மின்வர்த்தகத்தில் ஈடுபட தடை மத்திய அரசு தடை விதித்துள்ளது.
மத்திய மின்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மின்சார உற்பத்தி நிறுவனங்கள் மூலம் மாநிலங்களில் உள்ள மின் வினியோக நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. Gencos எனப்படும் இந்த உற்பத்தி நிறுவனங்களுக்கான நிலுவைத் தொகையை பல மாநிலங்கள் நீண்ட காலமாக திருப்பி செலுத்தாமல் உள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி, தமிழ்நாடு உள்பட 13 மாநிலங்கள் 5 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி வைத்து உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக தெலங்கானா ஆயிரத்து 380 கோடி ரூபாயும், தமிழ்நாடு 926 கோடி ரூபாயும் நிலுவை வைத்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பில் தயாரிக்கப்பட்டு இரண்டரை மாதங்கள் வரை தொகையை செலுத்த அவகாசம் அளிக்கப்படும் நிலையில் அதைக் கடந்தும் கட்டணத்தை செலுத்தாத காரணத்தால் மின்சாரம் கொள்முதல் மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் உள்பட 13 மாவட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகளின் படி, 7 மாதங்களுக்கும் மேலாக நிலுவை தொகையை செலுத்தாத காரணத்தால், இந்த 13 மாநிலங்களும் மின்சார வர்த்தகத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் தமிழகத்தில் மின்சார பற்றாக்குறை ஏற்பட்டு மின்தடை ஏற்படும் அச்சம் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு அளித்த விளக்கத்தில், “தற்போதைய நிலவரப்படி ரூ.70 கோடி மட்டுமே நிலுவையில் உள்ளது. நாளை ரூ.70 கோடியும் செலுத்தப்பட்ட பின், வழக்கமான நிலை தொடரும். பணம் செலுத்துவது தொடர்பான தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட சந்தேகங்களை நிவர்த்தி செய்வதில் ஏற்பட்ட தாமதத்தால் நிலுவைத் தொகை வந்துள்ளது. இன்றய நிலையில் தமிழ்நாட்டின் மின் உற்பத்தி போதுமானதாக இருந்தாலும், எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு நாளையே பணம் செலுத்தப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.