பெரம்பலூர் அருகே பல பெண்களிடம் திருமண ஆசை காட்டி மோசடி செய்த நபரை சென்னையில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் கிழுமத்தூர் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனக்கும், பென்னக்கோணம் கிராமத்தை சேர்ந்த பால்ராசுக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடந்ததாகவும், சில மாதங்களில் அவர் வேறு பெண்களுடன் பழகி திருமணம் செய்து குடும்பம் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், காரைக்குடியை சேர்ந்த சிறுமி ஒருவரையும் ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியுள்ளார். இதனால், காரைக்குடி போலீசார் பால்ராசு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே, பல பெண்களை ஏமாற்றிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இதையடுத்து, விசாரணை நடத்திய போலீசார், சென்னையில் தலைமறைவாக இருந்த பால்ராசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.








